Monday, April 30, 2018

2018-மே நாளில் சூளுரைப்போம்!


மே நாளில் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உலகப் பாட்டாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும், ஏகாதிபத்திய நிதி மூலதனத் தாக்குதலி லிருந்து உடனடி நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடுவதோடு சோசலிசம், ஜனநாயகம், விடுதலைக்காக போராட சூளுரைக்கும் நாளே மே நாள்!! தற்போது ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடிகளை உலக மக்கள் மீது சுமத்த பாசிசத்தை திணிப்பது; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போர் தீவிரமடையும் சூழலில் இம்மேநாளை எதிர்கொண்டுள்ளோம்!

தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி

2008ல் அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியிலிருந்து உலகம் இன்னமும் மீளவில்லை. 2020ல் அமெரிக்காவும், உலகமும் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியில் வீழும் என்றும், அது 2008 ஐ விட கடுமையானதாக இருக்கும் என்றும் சர்வதேச செலாவணி நிதிய செயலாளர் எச்சரித்துள்ளார்.

முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களின் தாசர்களும், ‘ஊக்கத்தொகை’, ‘நட்ட ஈடு’ என்ற பெயரில் பல டிரில்லியன் டாலர்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கினார்கள். தொழிலாளர்களின் கூலியை குறைப்பது, சேமநல நிதியை சூறையாடுவது, காப்பீடு திட்டத்தை கைவிடுவது மற்றும் மக்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் கார்ப்பரேட்டுகளும் அவர்களது அடிவருடிகளும் அரசாங்கத்தில் அமர்ந்து கொண்டு திட்டங்கள் மூலமாக இயற்கை வளங்கள், சுரங்கங்கள், காடுகள், நிலம், நீர்நிலைகள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டனர். இதன் விளைவாக செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தது. 1% முதலாளிகள் 300 கோடி மக்களின் சொத்தின் அளவிற்கு சொத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

இவ்வாறு குவிக்கப்பட்ட நிதியை உற்பத்தியில் ஈடுபடுத்தவில்லை; ஊகவாணிகத்தில் தான் ஈடுபடுத்தினர். இது வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியைத்தான் (Jobless Growth) உருவாக்கின. செல்வம் குவிவதும், வறுமை பெருகுவதும் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே போவதும் தீவிரமாகிறது. நிதி மூலதன கார்ப்பரேட் கும்பலை ஒழித்துக் கட்டி சோசலிசம் படைப்பதே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரே வழியாகும்.

ஏகாதிபத்தியவாதிகள் ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை உலக மக்கள் மீதும் திணிப்பதற்கு பாசிச ஆட்சிமுறையை கட்டியமைக்கிறார்கள். மறுபுறம் உலகை மறுபங்கீடு செய்வதற்கான ‘பனிப்போரில்’ ஈடுபடுகிறார்கள்.

“பனிப்போர்” துவங்கிவிட்டது

அமெரிக்க ஏகாதிபத்தியம் பலமாக இருந்தாலும் இராணுவ ரீதியில், பொருளாதார ரீதியில் சரிந்து வருகிறது. அதன் ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறை 568 பில்லியன் டாலர்களாகும். வீழ்ந்து வரும் அமெரிக்காவிற்குப் போட்டியாக ரசிய, சீன ஏகாதிபத்திய நாடுகள் வளர்ந்து வருகின்றன. அமெரிக்கா, சீனா மீது வர்த்தகப் போரைத் துவங்கியுள்ளது. இது, தவிர்க்க முடியாமல் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் செல்வாக்கு மண்டலங்களுக்கான-உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போரை தீவிரப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், தனக்கு அடங்க மறுக்கும் சிரியா, ஈரான் மற்றும் வடகொரியா மீது ஆக்கிரமிப்புப் போர்களை நிகழ்த்துகிறது. ஆட்சிக் கவிழ்ப்பு செய்து பொம்மை அரசை நிறுவ முயற்சிக்கிறது. சீனாவும் ரசியாவும் இந்நாடுகளில் நிலவுகின்ற ஆட்சிகளை பாதுகாப்பதன் மூலம் தங்களது செல்வாக்கு மண்டலங்களுக்காகப் போராடுகின்றன. இதுவே ‘2வது பனிப்போரின்’ அடிப்படையாகும். எனவே ‘பனிப்போர்’ முயற்சிகளை எதிர்த்தும், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் ஆகிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும் சிரியா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட நாடுகளும், மக்களும் ஒன்றிணைந்து போராடி முறியடிக்க ஓரணியில் திரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

தீவிர வலதுசாரி டிரம்ப் கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து “அமெரிக்காவே முதன்மை” என்று கூறி ஏகாதிபத்தியப் போருக்கு தயாரிக்கிறது. தனது உலக மேலாதிக்க நோக்கத்துக்காக ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்டு இந்தோ-பசிபிக் இராணுவ கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்துத்துவப் பாசிச மோடி கும்பலின் ஆட்சி, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான ‘பனிப்போர்’, இந்தோ-பசிபிக் இராணுவ கூட்டமைப்பில் சேர்ந்துள்ளது. சீனாவுக்கு எதிராக ஆசியாவில் போருக்கான நிலைமைகளை உண்டாக்குகிறது. எனவே மோடி அரசை அமெரிக்க முகாமிலிருந்து வெளியேறக் கோரிப் போரடுவது நமது சர்வதேசியக் கடமையாகும்.

அமெரிக்காவின் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அமெரிக்காவிற்கு சேவை செய்யும் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை காங்கிரசைவிட தீவிரமாக அமல்படுத்தி வருகின்றது. ஒருபுறம் ‘வளர்ச்சி’ என்ற பெயரில், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவற்றை அமல்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் சொத்துகளை பன்மடங்கு பெருக்கிவிட்டது. மறுபுறம், இந்திய நாட்டின் தொழில்துறை, வணிகம் அனைத்தையும் கபளீகரம் செய்து மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கின்றது.

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மூலம் ஊகவாணிபமே செழித்து வளர்கிறது. உற்பத்தித் துறைகளோ அழிகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளால் பங்குச் சந்தையை சேர்ந்த 1700 நிறுவனங்கள் தங்கள் சொத்துகளை 20% பெருக்கிக் கொண்டன. அம்பானி, அதானி, மல்லையா, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் கும்பல் அரசியல் ஆதிக்கம் செலுத்தி பொதுத்துறையைக் கைப்பற்றி தங்கள் சொத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டன. கறுப்புப் பண ஒழிப்பு என்ற பேரால் மக்களின் சேமிப்புகளை வங்கிகளில் குவித்துவிட்டது. மறுபுறம் கார்ப்பரேட் கும்பல் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட மறுத்து ஏமாற்றி வருகின்றனர். எனவே வங்கிகள் திவாலடைகின்றன. அதற்கு வங்கிகளை தனியார்மயமாக்கி அவர்களிடமே ஒப்படைக்க முயற்சிக்கிறது மோடி கும்பல்.

அதே நேரம் பணமதிப்பு நீக்கம் ஜி.எஸ்.டி போன்ற மோடி கும்பல் அமல்படுத்தும் கொள்கைகள் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவரும் ஜவுளித்துறை, தங்கம், வைரம் மற்றும் இரும்பு-எஃகு போன்ற சிறு, குறு துறைகளை அழித்துவிட்டன. இதை நம்பியுள்ள கோடிக்கனக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துவருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு 25% வரிச் சலுகை வழங்கிய மோடி கும்பல், 42 தொழிலாளர் சட்டங்களை நான்காக குறைத்து அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது. மேலும் அமைப்பு சார் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்து, வேலை நேரத்தை அதிகப்படுத்துகிறது; வேலைக்கு அமர்த்து-துரத்து (Hire and Fire) என்ற தொழிலாளர் விரோதச் சட்டத்தை இந்தியா முழுக்க அமல்படுத்துவதன் மூலமும், குறிப்பிட்ட பருவ வேலைவாய்ப்பு (Fixed term employment) சட்டம் மூலமும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றிவிட்டது. கூலியைக் குறைக்கவும், உழைப்பைச் சுரண்டவும், கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கவுமே பாராளுமன்றத்திற்குக் கூடத் தெரியாமல் இச் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது மோடி ஆட்சி.

பெருகி வரும் விவசாயிகளின் துயரங்களும், தற்கொலைகளும்

மோடி ஆட்சியில், விவசாய உற்பத்தியானது வரலாறு காணாத அளவுக்கு 2% வீழ்ச்சி அடைந்துள்ளது. வேளாண் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி அனைத்தையும் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கும் கார்ப்பரேட் விவசாயக் கொள்கைகளே இதற்கு காரணமாகும். விவசாயிகளுக்கு வங்கி கடன் மறுப்பு, மானிய வெட்டு, மலிவான விலைக்கு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதி, உற்பத்தி விலையைவிட ஆதார விலைகளைக் குறைப்பது போன்றவற்றால் விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றி ஓட்டாண்டியாக்கி தற்கொலைக்கு தள்ளுகின்றது. விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்படுவதால், வெள்ளமும் வறட்சியும் விவசாயிகளின் வாழ்வை துயரமாக்கிவிட்டது. மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை பெருகிக் கொண்டே செல்கிறது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி விவசாயத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மோடி கும்பல் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கி நாட்டின் பொருளாதாரத்தை இராணுவப் பொருளாதாரமாக மாற்றிவருகிறது. கடன் ரத்து கோரி டெல்லியில் நிர்வாணமாகப் போராடிய விவசாயிகளை அழைத்துப் பேசக் கூட தயாரில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதில் மட்டும் அக்கறை காட்டுகிறது. இவ்வாறு மோடி ஆட்சி விவசாயிகளின் துயரமாக மாறியுள்ளது.

 மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்துவதால் மோடி அரசாங்கம் மக்கள் மத்தியில் பெருமளவில் அம்பலப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மோடி அரசால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்கிறார்கள். இத்தகைய மக்கள் கலகங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு இந்துத்துவப் பாசிசத்தை ஏவிவருகிறது.

புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிசம்

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல், தேசிய இனங்கள், இசுலாமிய மதச் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், பகுத்தறிவுவாதிகள், சமூக நீதிக்குப் போராடுவோர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்டு படுகொலை புரிகிறது. குறிப்பாக மோடி அரசு அமல்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை, புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்களை நசுக்கவும், திசை திருப்பவும், சாதி, மத வெறியை தூண்டி மோதவிடுகின்றது. மக்களை பிளவுபடுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக, பாராளுமன்ற முறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்துமத வெறியர்களும், கிரிமினல்களும் நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். அரசு எந்திரமே காவி மயமாக்கப்படுகிறது.அதன் விளைவாகவே, அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதியான லலித்-கோயல் அமர்வு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சாதிவெறி கும்பலுக்கு ஆதரவாகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும் திருத்துகிறது. மனுதர்ம வர்ணாசிரமத்தை திணிக்கிறது.

இதே நீதிபதிகள்தான் வரதட்சனை சட்டத்தை திருத்தி பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு துணைபோனார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் மீது மட்டுமல்ல, இசுலாமிய மதத்தினரை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதான் காஷ்மீர் சிறுமி ஆசிபாவின் கொடூரமான வன்புணர்வு-படுகொலையும் ஆகும். காவிகளின் ஆட்சியில் கவர்னர் மாளிகையே அந்தப்புரமாக மாறிவருகிறது. காவிக் காடையர்களின் ‘ராமராஜ்ஜியம்’ என்பது “அமெரிக்க மாமனின் ராஜ்ஜியம்” ஆக, காம வெறிக் கூட்டங்களின் “காமராஜ்ஜியம்” ஆக மாறிவருகிறது.

இத்தகைய ஒரு சூழலில் மக்களின் தன்னியல்பான போராட்டங்கள் எங்கே புரட்சிகரமாக மாறிவிடுமோ என்று ஆளும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன. ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்பு, இந்துத்துவப் பாசிச எதிர்ப்பு தீவிரம் பெற்றுவரும் இச்சூழலில் ஒரு புரட்சிகர இயக்கம் உருவாவதை ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் தாசர்களும் அழிக்கத் துடிக்கின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம் (AIM), மற்றும் சும்ஸ் (SUMS) போன்ற அமைப்புகள், ஏகாதிபத்திய எடுபிடி தொண்டுநிறுவனங்கள் புரட்சிகர முகமூடி அணிந்து பாட்டாளி வர்க்க இயக்கங்களை ஊடுருவி சீர்குலைக்க முயற்சித்து வருகின்றன. இந்த துரோகத் தனமான முயற்சிகளை முறியடிப்பது அவசியமாகும். எனவே உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட தேசங்களும், மக்களும் இம்மேநாளில் கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறை கூவி அழைக்கிறோம்.

* அமெரிக்க, ரஷ்ய-சீன ஏகாதிபத்தியங்களின் பனிப்போர் முயற்சிகளை முறியடிப்போம்!
* உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கு எதிராக சிரியா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட நாடுகளும், மக்களும் ஒன்றுபடுவோம்!
* மோடி அரசே! அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான இந்தோ-\பசுபிக் இராணுவக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறு!
* விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்போம்!
* தேசிய இனங்கள், சிறுபான்மை மதத்தினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் மீது இந்துத்துவப் பாசிசத் தாக்குதல் நடத்தும் மோடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்!
* புரட்சிகர முகமூடியணிந்து, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் ஊடுருவி சீர்குலைக்கும், ஏகாதிபத்திய எடுபிடிகளான “எய்ம்” (கிமிவி) போன்ற தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிப்போம்!
* மார்க்சிய-, லெனினிய, -மாவோ சிந்தனை வெல்க!
* உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல் 2018

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.