Friday, October 24, 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ! ஜனநாயகவாதிகளே !

       வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்குத் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதனால் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்ததுடன் பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறையிலும் அடைக்கப்பட்டார். அத்துடன் அவர் 10 ஆண்டுகள் வரை  தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

ஜெயா கும்பலின் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆனது பற்றி நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா தனது தீர்ப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

“66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.53 கோடி (ரு.53,60,49,954) வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) பொது ஊழியர் பொறுப்பில் இருந்த காலத்தில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13(i)(e)ன் படியும், மற்ற மூன்று குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள தால் இந்தியத் தண்டனைச் சட்டம் 120(B)யின் படியும் குற்றமிழைத்துள்ளார். மற்ற மூவரும் முதல் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 109ன் படி குற்றமாகிறது. எனவே நான்கு பேரும் குற்றவாளிகளே” என்று தீர்ப்பளித்துள்ளார்.