Saturday, December 17, 2016

மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!



மோடி அரசே!
மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும்
500, 1000- ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பணக் களையெடுப்பு, தீவிரவாதப் பண முறியடிப்பு, ஊழல் வேரறுப்பு என்று கூறி மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அதையும் எதேச்சதிகார முறையிலேயே அறிவித்தது. கறுப்புப் பணக்காரர்கள் மீது குறிவைத்து “சர்ஜிகல் தாக்குதல்” நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, ரூ. 500, 1000 நோட்டுகளைச் செல்லாததாக்கி, 86 சதவீதப் பணப் புழக்கத்தைத் தடைசெய்து மாற்று நோட்டுகளைப் புழக்கத்தில் விடாமல், மோடி கும்பல் பரந்துபட்ட மக்கள் மீது “கார்ப்பெட் பாம்” தாக்குதலை நடத்தியுள்ளது.

மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், பணப்புழக்கம் குறைந்ததாலும் நாடு முழுக்க பொது மக்கள் அத்தியாவசியச் செலவுக்கே பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். பணத்துக்காக ஏ.டி.எம்.களில் வரிசையில் நின்று நாட்டு மக்கள் மாண்டு வருகின்றனர். இதுவரை 90 பேருக்கு மேல் மாண்டுவிட்டனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 55,000 திருமணங்கள் நின்றுவிட்டன. மேலும் சிறு, குறு தொழில்கள் முதல் - நடைபாதைக் கடைகள் வரை சீரழிந்து விட்டது; நடுத்தர வர்க்கம் முதல் - அன்றாடங் காய்ச்சிகள் வரை நாட்டின் பெரும்பகுதி மக்களை வாட்டி வதைப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிப்போட்டுவிட்டது.