Sunday, September 25, 2011

பரமக்குடியில் 7 பேர் படுகொலை சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

பரமக்குடியில் 7 பேர் படுகொலை
சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

பரமக்குடியில் செப்டம்பர் 11ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு, கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒளிந்து கொண்ட இருவர் பாம்புக்கடித்தும், ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். 144 தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.