Saturday, December 17, 2016

மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!



மோடி அரசே!
மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும்
500, 1000- ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பணக் களையெடுப்பு, தீவிரவாதப் பண முறியடிப்பு, ஊழல் வேரறுப்பு என்று கூறி மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அதையும் எதேச்சதிகார முறையிலேயே அறிவித்தது. கறுப்புப் பணக்காரர்கள் மீது குறிவைத்து “சர்ஜிகல் தாக்குதல்” நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, ரூ. 500, 1000 நோட்டுகளைச் செல்லாததாக்கி, 86 சதவீதப் பணப் புழக்கத்தைத் தடைசெய்து மாற்று நோட்டுகளைப் புழக்கத்தில் விடாமல், மோடி கும்பல் பரந்துபட்ட மக்கள் மீது “கார்ப்பெட் பாம்” தாக்குதலை நடத்தியுள்ளது.

மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், பணப்புழக்கம் குறைந்ததாலும் நாடு முழுக்க பொது மக்கள் அத்தியாவசியச் செலவுக்கே பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். பணத்துக்காக ஏ.டி.எம்.களில் வரிசையில் நின்று நாட்டு மக்கள் மாண்டு வருகின்றனர். இதுவரை 90 பேருக்கு மேல் மாண்டுவிட்டனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 55,000 திருமணங்கள் நின்றுவிட்டன. மேலும் சிறு, குறு தொழில்கள் முதல் - நடைபாதைக் கடைகள் வரை சீரழிந்து விட்டது; நடுத்தர வர்க்கம் முதல் - அன்றாடங் காய்ச்சிகள் வரை நாட்டின் பெரும்பகுதி மக்களை வாட்டி வதைப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிப்போட்டுவிட்டது.

Tuesday, November 22, 2016

மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் - 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்துச் செய்!!

மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் - 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்துச் செய்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. மோடி அரசு அமல்படுத்தி வரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி மந்தம், விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு, வேலையின்மை பெருக்கம், விலைவாசி உயர்வு போன்ற எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாமல் திண்டாடுகிறது. கறுப்புப் பணத்தை மீட்பதாக கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மோடி ஆட்சிமீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை திசைதிருப்பவும், உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்று தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் மோடி ஆட்சி திடீரென்று கறுப்புப் பண ஒழிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதையும் எதேச்சதிகாரமான முறையில் வெளியிட்டுள்ளது.

மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நாடகம்

500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் ஊழல், வறுமை, கறுப்பு பணத்தை ஒழிப்பதுடன் பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் விடுகிறார் மோடி. ஆனால், மோடியின் இந்த அறிவிப்பால் கறுப்பு பணத்தை ஒழிக்கமுடியாது. மொத்த கறுப்புப் பணத்தில் 5லிருந்து 6 சதவீதம் வரைதான் பணமாக உள்ளது. இந்த அறிவிப்பால் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. மேலும் இந்த அறிவிப்பே ஒரு மாபெரும் ஊழல் என்றும், இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு 10 நாளைக்கு முன்பே அம்பானி, அதானி போன்ற மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கும், பி.ஜே.பி.-யினருக்கும் தகவல்களை தெரிவித்து கறுப்புப் பண திமிங்கிலங்களை காப்பாற்றிவிட்டார் மோடி என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் டெல்லி முதல்வர் கேஜரிவால். மேலும், பணம் 500, 1000 ரூபாயாக இருப்பதைவிட வெளிநாடுகளில் சொத்துக்களாக குவிந்துள்ளதே அதிகமாகும். பனாமா பேப்பர்ஸ் மூலம் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. அதேபோல சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் 120 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் இருப்பதாக கணக்கிட்டுள்ளன. இவற்றை மீட்டு கொண்டுவராமல் ரூ.500,1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. இந்த அறிவிப்பு கறுப்பு பண திமிங்கிலங்களின் அடியையோ முடியையோ கூட அசைக்கவில்லை. மாறாக ஏழை நடுத்தர மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார எமர்ஜென்சி

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நாட்டின் பணப்புழக்கம் அடியோடு ஸ்தம்பித்துவிட்டது. வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்று மக்கள் வதைப்படுகின்றனர். நெரிசலில் 47 பேர்கள் மரணமடைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் ஏ.டி.எம். மரணங்கள் தொடருகின்றன. மேலும் சில்லரை வர்த்தகம், மொத்த வர்த்தகம், சிறு தொழில், சரக்கு போக்குவரத்து, மீன்பிடித் தொழில் என உள்நாட்டுத் தொழில்கள் முடங்கிவிட்டன. உ.பி., ம.பி. போன்ற மாநிலங்களில் மக்களிடம் பணம் இன்றி கடைகளை சூறையாடுகின்றனர். ராஜஸ்தானில் இலட்சக்கணக்கான விவசாயிகள் ராவி பருவ விதைப்பை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். கோவை திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முடங்கிவிட்டன. கிராம கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் ஒரு வாரகாலமாக முடங்கியுள்ளன. நான்கு நாளைக்குள் ரூ.1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரண நிலைமைக்கு வர பல வாரங்கள் ஆகும் என நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறுகிறார். மக்களின் துயரம் தொடர்கிறது. மோடியின் அறிவிப்பு நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார எமர்ஜென்சியை திணித்துள்ளது.

500, 1000 என்ற அதிக மதிப்புள்ள நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப் பணத்தை ஒழித்துவிடலாம் என்று மோடி கூறுகிறார். ஆனால் புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டு கறுப்பு பண பதுக்கலுக்கு வழிவகுத்து கொடுக்கிறார். மீண்டும் 1000 ருபாய் நோட்டை கொண்டுவருவோம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது மூலம் ரூ.400 கோடிதான் அரசுக்குக் கிடைக்கும். ஆனால் புதிய நோட்டுக்களை அச்சடித்து சுற்றுக்குவிட அரசுக்கு மொத்தம் ரூ.14,000 கோடி செலவழியும். பின்னர் எதற்காக ஏழைகளை வாட்டிவதைக்கும் இந்த 500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு. மலையை கெல்லி எலியைக் கூட பிடிக்காமல் நாட்டில் கிலியை ஏற்படுத்தியுள்ளார் மோடி. எனவேதான் கறுப்புப் பணத்தை காப்பாற்றும், ஏழை நடுத்தர மக்களை வதைக்கும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்.

கறுப்புப் பணத்தை கைப்பற்ற வழி என்ன?

கறுப்புப் பணம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வணிகவரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம் போன்ற வரிகளை முறைப்படி அரசுக்கு செலுத்தாமல் வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டிய பணத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கும் பணமாகும்.

உள்நாட்டில் கறுப்புப் பணம்

அமைச்சர்கள், அதிகாரிகள், சாராய கம்பெனி முதலாளிகள், தொழிலதிபர்கள், மணல்-கிரானைட் மாஃபியாக்கள் ஆகியோரே கறுப்புப் பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள். மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை நேரடியாக அமைச்சர்கள்தான் கையாள்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து ஒரு பகுதியை சுருட்டிக்கொள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அரசு உயர் அதிகாரிகள் துணைபோகிறார்கள்.. அவர்கள் தங்கள் பங்குக்கு சில கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி பொதுத்திட்டங்கள் மூலமாக இவர்கள் அடிக்கும் ஊழல் பணம் ஒரு பக்கம் இருக்க, கல்வி நிலையங்கள் மாணவர் சேர்க்கைக்கு வாங்கும் பல லட்சங்களும் கறுப்புப் பணமாகவே சேர்கிறது. மேலும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு மூலம் கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் கோடிகளை பதுக்குகிறார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பதுக்குவதுதான் பல லட்சம் கோடிகளாக வளர்ந்நு நிற்கிறது.

வெளிநாட்டில் குவிந்துள்ள கறுப்பு பணம்

கறுப்புப் பண பதுக்கலுக்கு சொர்க்கபுரியாக திகழும் சுவிஸ் வங்கி, உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பின் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் மட்டுமே 1500 மில்லியன் டாலர் கறுப்பு பணத்தை அங்கே டெபாசிட் செய்துள்ளதாக கூறுகிறது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்திருக்கும் நபர்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் டாப் இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அவர் கொடுத்த ஆதாரங்களின் படி 1970களிலிருந்தே இந்தியர்கள் பங்கு சந்தை மூலமாகவும், போதைப் பொருட்கள் மூலமாகவும், அறக்கட்டளை மூலமாகவும், போலி திட்டங்கள் மூலமாகவும் கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் டெபாசிட் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தில் மற்ற நாடுகளின் மொத்த கறுப்பு பணத்தைவிட இந்தியாவின் கறுப்புப் பணம் அதிகம். மொத்தம் 2000 இந்தியர்களின் பெயர்களில் கறுப்புப் பணம் அங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் டாப் லிஸ்ட் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கார்ப்பரேட் நிறுனவங்கள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி புதிய ரூட்டில் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கின்றன. பொய்யான வரவு செலவு கணக்குகளைக் காட்டி ஹவாலா வர்த்தகத்தின் மூலம் அவற்றை வெளிநாட்டில் பதுக்குவது; மூலப் பொருட்களின் விலைகளை அதிகரித்துக் காட்டுவது; அதிகபட்ச செலவு செய்ததாக கணக்கு காட்டுவது; உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான சம்பளம் வழங்குவது; காண்டிராக்ட் முறையில் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுப்பது, போனஸ் தர மறுப்பது போன்ற உழைப்புச் சுரண்டல் மூலமும்; 2ஜி அலைக்கற்றை 1.76 லட்சம் கோடி, காமன்வெல்த் விளையாட்டு 70 ஆயிரம் கோடி, ஸ்டாம்ப் ஊழல் 20 ஆயிரம் கோடி, சத்தியம் ஊழல் 14 ஆயிரம் கோடி, கால்நடை தீவன ஊழல் 900 கோடி போன்ற மாபெரும் ஊழல் பணமும் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ளன. அப்படிப் பார்க்கும் போது உலக அரங்கில் இந்தியா வாங்கியிருக்கும் கடனை விட இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் பல மடங்கு அதிகம். அதை கைப்பற்றினாலே அந்நியக் கடன் ஒழியும். இந்தியா பூலோக சொர்க்கமாக மாறும். (தகவல் ஜூனியர் விகடன்).

கறுப்புப் பண காவலன் மோடி

பாராளுமன்ற தேர்தலின்போது வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை கைப்பற்றி வீட்டுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்று மோடி வாக்குறுதியளிதார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சியை போலவே கறுப்பு பணத்தை கைப்பற்ற மறுக்கிறார். சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப்பண தகவல்கள், பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் அரசுக்குக் கிடைத்தும் அவற்றைக் கொண்டு கறுப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்கவில்லை. எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை ஜெர்மனி கொடுக்கத் தயாராக இருந்தும் அந்தப் பட்டியலை பெற மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பா.ஜ.க-வை சேர்ந்த ராம்ஜேத் மலானி எம்.பி.யே குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு கறுப்பு பண திமிங்கிலங்களுக்கு காவல் இருக்கும் மோடி தன் உயிர் போனாலும் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். மோடி தியாகி வேடம் போடுவது நாட்டுமக்களை ஏமாற்றத்தான். அத்துடன் மக்களின் எதிர்ப்புகள், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளுக்குப் பின்பு கூட தனது அறிவிப்பை திரும்பப் பெற மோடி தயாரில்லை. மாறாக எதேச்சதிகார பாதையில் எமர்ஜென்சியை நோக்கி நாட்டை தள்ளுகிறார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க வழி

கறுப்புப் பணத்தை கைப்பற்ற வேண்டுமானால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளும், தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் குவித்து வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டு அவற்றைக் கைப்பற்ற வேண்டும். மாபெரும் ஊழலுக்கும், பதுக்கலுக்கும் காரணமான புதிய தாராளக் கொள்கைகளை ஒழிக்க வேண்டும். அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை கைப்பற்றுவது சுலபமல்ல. மாறாக அவர்களின் சொத்துக்களை கைப்பற்றி அரசுடைமை ஆக்குவது ஒன்றுதான் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான ஒரே வழியாகும். அதனை இன்றைய இந்திய அரசும், அரசமைப்பு முறையும் ஒருகாலும் செயல்படுத்தாது. புரட்சியின் மூலம் அமையும் புதிய ஜனநாயக அரசுதான் அதனை சாதிக்கும்.

எனவே புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், கறுப்புப்பண திமிங்கிலங்களின் சொத்துக்களை கைப்பற்றி அரசுடைமையாக்கவும், கறுப்புப்பண காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றவும் கோருகின்ற அனைவரும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

 ê மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் - 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!

 ê சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ள முதலாளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடு! அவர்களின் உடைமைகளை அரசுடைமையாக்கு!

 ê உள்நாட்டில், பங்குச்சந்தைச் சூதாடிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், தரகு முதலாளித்துவ அரசியல் வாதிகள், அதிகாரிகளின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்று!

 ê கறுப்புப் பணக் காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றுவோம்!

 ê எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டுவர முயலும் மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
பேசி : 9382815231

நவம்பர்-2016

Tuesday, November 15, 2016

மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் – 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!


மோடி அரசே! மக்களை வதைக்கும்
கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் –
500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!
*  ஸ்விஸ் வங்கியில்  கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ள
முதலாளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடு!
அவர்களின் உடைமைகளை அரசுடைமையாக்கு!

*  உள்நாட்டில், பங்குச்சந்தைச் சூதாடிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், தரகு முதலாளித்துவ அரசியல் வாதிகள்,
அதிகாரிகளின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்று!

*  கறுப்புப் பணக் காவலன்  மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றுவோம்!

*  எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டுவர முயலும் மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday, October 23, 2016

தமிழகம் - காவிரியின் வடிகால் அல்ல! காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!


தமிழகம் - காவிரியின் வடிகால் அல்ல!
காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

காவிரிப் பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் 30.9.2016 அன்று, மத்திய அரசு 4 நாட்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் 10 நாளைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்குமுறையாற்று ஆணையத்தையும் அமைக்க வேண்டும்,  என்ற உத்தரவை கர்நாடகா ஏற்க மறுத்ததுடன் தண்ணீரை திறக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.  

கர்நாடகம், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்த் தாவாச் சட்டம் என அனைத்தையும் தொடர்ந்து மீறி வருகிறது. காவிரியில் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் என்கிறது. வறட்சிக் காலங்களில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுத்து அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக, தமிழகத்தை காவிரியின் வடிகாலாக மாற்றிட முயற்சிக்கிறது.

காவிரிப் பிரச்சினையில் மோடி அரசின் துரோகம்

காவிரிப் பிரச்சினையில், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் மார்பில் குத்துகிறது என்றால், மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியோ தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது. உச்ச நீதி மன்றத்தில் 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒப்புக்கொண்டதோடு, மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால், 3.10.2016-ல் நடந்த வழக்கு விசாரணையில், “நடுவர்மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருக்கும் நிலையில், இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு செல்லாது, காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றச் சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும், இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறி பல்ட்டி அடித்து கர்நாடகத்திற்கு சாதகமான நிலை எடுத்து தமிழகத்தை வஞ்சித்தது. 40-ஆண்டுகால தமிழகத்தின் சட்டப் போராட்டத்தை நிர்மூலமாக்கியது. இதன் மூலம் மோடி ஆட்சி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. மாறாக, மாநிலங்களின் உரிமைகளையும் பறித்து, அனைத்து அதிகாரத்தையும் மத்தியில் குவித்து எதேச்சதிகார ஆட்சியின் மூலம் புதியகாலனியத்திற்கு சேவை செய்கிறது. இத்தகைய எதேச்சதிகாரப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.

தீராத காவிரிப் பிரச்சினை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கின்ற தீர்ப்புதான். அந்தத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராடுவதும் அவசியம்தான். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மட்டுமே காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. காரணம் 2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் வறட்சிக் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வது எப்படி என்ற வரையறையை முன்வைக்கவில்லை, அதை நீதிமன்றத்தால் வரையறுக்கவும் முடியாது. எனவேதான் இரண்டாண்டுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படும் எல்லாக் காலங்களிலும் போராட்டத்திற்கான நிலைமைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

இவ்வாறு காவிரிப் பிரச்சினையில் நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாததற்கு காரணம் என்ன?

காவிரிப் பிரச்சினையில், காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் கர்நாடகத்தில் அக்கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால்தான், போட்டிப் போட்டுக் கொண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த மறுக்கின்றன என்பதில் பாதி உண்மைதான் உள்ளது. காவிரிப் பிரச்சினைத் தீராமல் தொடர்வதற்கு ஜனநாயக விரோத அரசியல் சட்டங்கள் மற்றும் ஆளும் வர்க்கக் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன.

நதிநீர்ச் சிக்கலை தீர்க்க வக்கற்ற அரசியல் சட்டம்

காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு சரியான, நியாயமான முறையில் தீர்வு காண்பது என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு தீர்வு காண்பதற்கு எளிமையான சட்டவிதிகள் எதுவும் இல்லை. 

         வரலாற்று ரீதியாகவே இந்தியாவில் ஆற்று நீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன. இந்தியாவில் ஓடும் 18 பெரிய ஆறுகளில் 17 ஆறுகள் மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆறுகள் ஆகும். இதில் எதில் ஒன்றிலும் இதுநாள் வரையில் சிக்கல்கள் தீர்க்கப்படவே இல்லை. இதற்கு ஜனநாயகமற்ற வரலாற்று ரீதியான காரணங்களுடன் அரசியல் சுயநலன்களும் காரணமாகும். 

ஆற்று நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண 1979ஆம் ஆண்டு உருவான நர்மதை ஆற்று நடுவர் மன்றம், 1980ஆம் ஆண்டு உருவான கோதாவரி நடுவர் மன்றம், 2010ஆம் ஆண்டு உருவான கிருஷ்ணா நடுவர் மன்றம் போன்ற நடுவர் மன்றங்கள் வெகு காலமாக இயங்கவே இல்லை. நர்மதை நடுவர் மன்றம் 37 ஆண்டுகள் கடந்தபின்பும் சர்தார் சரோவர் அணைக்கு தீர்வு காணவே இல்லை. குஜராத்தின் வறண்ட கட்ச் பகுதிக்கு நீர் வழங்கும் பிரச்சினையில் குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கிடையில் அடுத்தக் கட்ட மோதல் தயாராகி வருகிறது. கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்சினை தீராமல் இரண்டாவது நடுவர்மன்றம் அமைக்கும் வேலை நடந்து வருகிறது.

நதி நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 262வது பிரிவோ, அதனடிப்படையில் 1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட  நடுவர் மன்றம் அமைப்பதற்கான சட்டத் திருத்தங்களோ, விவசாயிகள் உள்ளிட்டு அனைவருக்கும் நீர் உட்பட அனைத்துக்கும் உத்திரவாதம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(a) பிரிவு உட்பட அனைத்துச் சட்டங்களும் சில நீர்ப் பகிர்வு, நீர்மின் திட்டம் அமைக்க பயன்பட்டிருந்தாலும் மொத்தத்தில் நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியாததாகவே உள்ளன. விவசாயிகளின் பிரச்சினைகள் மட்டுமல்ல குடிநீர்ப் பிரச்சினையக் கூட, இருக்கும் சட்டங்களால் தீர்க்க முடியாது. எனவே நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க அரசியல் நிர்ணயச் சட்டமே மாற்றி எழுதப்பட வேண்டும். இவ்வாறு ஜனநாயகமற்ற அரசியல் சட்டங்களும், ஆளும் வர்க்கக் கட்சிகளின் அரசியல் சுயநலன்களும் காவிரிப் பிரச்சினைத் தீராததற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

காவிரிப் பிரச்சினைக்கு சரியானத் தீர்வு

காவிரிப் பிரச்சினையில் மேல் மடையைச் (Upper Riparian Rights) சார்ந்த கர்நாடகம், அதன் பகுதிக்குட்பட்ட ஆற்றுநீர் அதன் பயன்பாடு மீது முழு இறையாண்மையை உள்ளடக்கிய சட்ட அதிகாரம் கோருகின்ற ஹார்மன் கோட்பாட்டை முன்வைக்கிறது. 

அதற்கு நேர் மாறாக கீழ் மடையைச் (Lower Riparian Rights) சார்ந்த தமிழகம், ஆற்றுப் படுகை உழவர்களின் அனுபவ பாத்தியதை உரிமையைக் (Prescreptive Rights) கோருகிறது. அதாவது 1924 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி நீர் விடவேண்டும் என்று கோருகிறது.

இவ்விரண்டு கோட்பாடுகளும் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படாத, அநீதியான கோட்பாடுகளாகும். நாம் நிராகரிக்க வேண்டிய கோட்பாடுகளாகும். மாறாக, நிபுணர்களால் முன்வைக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமபங்கீட்டுக் கோட்பாடான ஹெல்சிங்கி கோட்பாடே (The Doctrine of Equitable Apportionment) நதி நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுகின்ற நியாயமான சரியான கோட்பாடாகும். இதன்படி, குறிப்பிட்ட பரப்பு அல்லது அமைப்பிற்குட்பட்ட ஆற்று நீரின் பயன்கள் அவ்வமைப்பு அல்லது பரப்பின் மீது சட்ட அதிகாரம் செலுத்தும் நாடுகள் தங்களுக்கிடையில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இத்தகைய சமபங்கீட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் காவிரி பிரச்சினைக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிர்ச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். இதனை உடனடியாக அமல்படுத்த நாம் போராட வேண்டும்.

ஆனால், காவிரிப் பிரச்சினை தீராததற்கு, ஆளும் வர்க்கக் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றொரு முக்கியக் காரணமாகும். மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் புதிய தாராளக் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்க்கையில் கடும் துன்பங்களைக் கொண்டு வந்துள்ளது. அதிலிருந்து அவர்களைத் திசைத்திருப்ப நதி நீர்ப் பிரச்சினைகளை ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன. 

விவசாயிகளின் அவலங்களும் ஆளும் வர்க்கங்களின் சதியும்

தண்ணீர்ப் பிரச்சினைதான் விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் என்று இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகளும் வாதிடுகின்றன.

        ஒருபுறம் தமிழகத்தில், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு “இறுதியானது”; அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கூட கேள்வி எழுப்ப முடியாது; இதுவே சட்டத்தின் நிலை என்று வாதிடப்படுகிறது. மறுபுறம் கர்நாடகத்தில், வறட்சி நிலவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீர்ப்புதான் அவர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று அவர்களிடம் உறக்கக் கூறப்படுகிறது. 

விவசாயிகளைப் பொறுத்தவரை, தங்களது வாழ்நிலை வீழ்ச்சியடைந்து வருகின்ற இன்றைய எதார்த்த சூழலில் இத்தீர்ப்புகள் என்பது மிகமிக சாதாரணமாகும். எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சியும் விவசாயிகளின் துன்பத்திற்கான உண்மையான காரணம் எங்கே உள்ளது எனக் கூறத் தயாரில்லை. இன்று நாடு முழுவதும் விவசாயிகள் நம்பிக்கை இழந்து தவித்து வருகின்றனர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் விவசாய நெருக்கடிகளின் பன்முகத் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் விவசாயிகளின் துன்பங்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. வேளாண் துறை நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் நன்கறிந்ததுதான். அவை பின் வருமாறு:

           புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்திய காலத்தின்போது விவசாய உற்பத்தி பாதியாக வீழ்ச்சியடைந்துவிட்டது; நபர் ரீதியான உணவுதானிய உற்பத்தி முழு அளவில் வீழ்ந்துவிட்டது;

   விவசாயிகளுக்கு வங்கிகள் அளித்துவந்த கடன்கள் குறைந்து, கந்துவட்டிக் கொடுமையில் சிக்குவது அதிகரித்து வருகிறது; வேளாண்மைத் துறைக்கான அரசாங்க முதலீடுகள் குறைந்து வருவதோடு, தனியார் முதலீடுகள் அதனை ஈடு செய்யவில்லை. விளைவு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு செலவு குறைக்கப்பட்டு விட்டது; 

            ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை சீரழித்து - உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் சந்தை சக்திகளின் வர்த்தகச் சூதாட்டத்தில் தள்ளி வதைத்துவருவது; 

     மானியங்களை வெட்டியதன் விளைவாக உரம், பூச்சி மருந்துகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்து இடுபொருட்களின் விலை உயர்ந்து விட்டது. தனியார் நிறுவனங்களிடமிருந்து மரபணு நீக்கப்பட்ட விதைகள் அதிக விலைகொடுத்து வாங்குவது போன்ற காரணங்கள் உற்பத்திச் செலவை அதிகரித்து வருவது; 

   வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கான அளவு ரீதியான கட்டுப்பாடுகளை நீக்கி, சுங்க வரிகளைக்  குறைத்து, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுப் பொருட்களை மலிவான விலையில் கொட்டிக் குவிப்பது, விளை பொருட்களின் விலை குறைந்து உள்நாட்டு விவசாயிகளால் போட்டிப் போடமுடியாமல் விவசாயம் நலிவடைந்து வருவது; 

   விவசாயிகள் பணப்பயிர் உற்பத்திக்கு மாறுவதால் விவசாயிகளின் குடும்பத் தேவைக்கான உணவுப் பாதுகாப்பு அழிவதுடன், பல பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி சுற்றுச் சூழலை பாதித்து வருவது; 

            விவசாயிகளின் வருமானத்தைவிட செலவு அதிகரித்து, சொத்துக்களை விற்பதும், கடன்படுவதும், அடகுவைப்பதும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறுவதும் அதிகரித்து வருவதுடன், வேறு எந்த வேலையும் கிடைக்காமல் குடிபெயர்வு அதிகரிப்பதும், கடன் தொல்லையால் தற்கொலையால் மாள்வதும் தொடர்கிறது. 

மேற்கண்ட புதிய காலனிய வேளாண்மைக் கொள்கைகள் வேளாண்மைத் துறையில் அடிப்படையான முரண்பாடுகளைத் தீவிரமாக்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றன. புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவதால் விவசாயிகள் வாழ்வு நலிவடைவதும், அதிருப்தியும் தீவிரப்பட்டுக்கொண்டே செல்கிறது. இரண்டு மாநில விவசாயிகளும் வறட்சிக்கும் பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகள் வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த மறுக்கின்றன. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி பேசவும் மறுக்கின்றன. மாறாக விவசாயிகளின் துன்பங்கள் அனைத்திற்கும் ஆற்று நீர்ப் பிரச்சினை குறித்த தீர்ப்புகள்தான் காரணம் என்று கூறி இனவெறியைத் தூண்டி இரண்டு மாநில விவசாயிகளையும் மோத விடுகின்றனர். 

விவசாயிகள் (அமைப்பாக்கப் படாததாலும், பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை புரிந்து போராடததாலும்) ஆளும் வர்க்கக்  கட்சிகளின் திசைதிருப்பும் பிரச்சாரத்திற்கு இறையாகி வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் தங்களது துன்பங்களுக்கானக் காரணங்களைப் புரிந்துகொள்ள காது கொடுத்து கேட்கவும் தயாரில்லை.

ஆனால், ஆளும் வர்க்கக் கட்சிகளோ, விவசாயிகளின் வீழ்ச்சிக்கு மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்ப் பிரச்சினைதான் முக்கியக் காரணம் என்று ஏமாற்றுகிறார்கள். ஏனென்றால் விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கானத் திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அதிருப்தி அடைந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சதியையும் திசைதிருப்புவதையும் தவிர வேறொன்றும் இல்லை. நதி நீரில் பெரும் பகுதியைப் பெறுவதுதான் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும், அதைப் பிற மாநில விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொள்வதுதான் தீர்வு என்றும் இன வெறியை ஊட்டி பகைமையை வளர்க்கின்றனர்.

       இவ்வாறு மத்திய மாநில அரசுகள் புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் விவசாய நெருக்கடியிலிருந்து விவசாயிகளைத் திசைதிருப்பும் ஆளும்வர்க்கச் சதிகள் நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தடையாக மாறியுள்ளது.

       மேலும் புதிய தாராளக் கொள்கையின்படி தண்ணீர் தனியார் மயமாக்கும் கொள்கைகள் நதிநீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண்பற்குத் தடையாக இருக்கிறது. 

தண்ணீரில் பொது உரிமையை மறுக்கும் தனியார்மயம்

1991ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மின் துறையை தனியாருக்குத் திறந்துவிடும் கொள்கையை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக நீர் மின் உற்பத்தியும் கூட தனியாருக்குத் திறந்துவிடப்பட்டது. அதன் விளைவாக தனியார் நிறுவனங்கள் ஆற்று நீரைத் தேக்குவதற்கான அணைகளைக் கட்டவும், பராமரிக்கவும், இயக்கவும் உரிமை கொண்டாடவும் அனுமதிக்கப்பட்டது. ஆற்றின் மீது தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு அனுமதி அளித்தது. இந்தப் புதிய கொள்கைகள் தண்ணீர் தனியார் மயமாக்கலில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு ஆறுகள், குளங்கள், ஏரிகள் அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பொது உரிமையாகவும், தனியார் நிலங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் தனியார் உடைமையின் கீழும் இருந்து வந்தது.

ஆனால், இன்றைய புதிய நிலைமைகளின் கீழ், மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பாக பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தண்ணீர் வணிகத்தில் கோக், பெப்சி, சூயெஸ், விவேண்டி, தேம்ஸ் வாட்டர் மற்றும்  பெக்டெல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை, தனி ஒரு விவசாயி பம்ப்செட் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விற்றதற்குப் பதிலாக, தற்போது பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் குளிர்பானங்கள் தயாரிப்பது, தண்ணீர் வியாபாரம் செய்வதற்காக கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெஹ்திகஞ்ச், தமிழகத்தில் தாமிரபரணி போன்ற இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்கின்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிறுவனங்கள் ஏராளமான நிதி மற்றும் அரசியல் ரீதியில் மிகவும் வலிமை வாய்ந்தவைகளாகும். உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அதிகாரமிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள், அமெரிக்க ஏகதிபத்தியம் போன்றவை இவைகளின் பின்னணியில் உள்ளன. இவை எந்த ஒரு அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தவும், அதன் கொள்கைகளை தீர்மானிக்கவும் வல்லமை மிக்க நிறுவனங்களாகும். 

பணம் மற்றும் கொள்ளை லாபமே தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கான பெரு இயக்கு சக்தியாக உள்ளன. மனிதகுலம் உள்ளவரை தண்ணீர் வியாபாரம் நெருக்கடி இன்றி வளர்ந்து கொண்டே இருக்கும். தண்ணீர் வியாபாரம் 400 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 3 டிரிலியன் டாலர் வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது வருடத்திற்கு ரூ.3,37,000 கோடியாக உள்ள முதலீடு வரும் காலத்தில் இது இரண்டரை மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.

தண்ணீர் தனியார் மயமாக்கல் மூலம் தண்ணீர்த் துறை சந்தையோடு இணைக்கப் படுகிறது. சந்தை விதிகளின்படி தண்ணீர் வழங்குவதற்கான முழு விலையையும் நுகர்வோர் கொடுக்க வேண்டும். காசில்லாத ஏழைகளுக்கு குடி தண்ணீரும் கிடையாது. ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கங்களும் கூட ஓரம்கட்டப்பட்டுவிடும். விவசாயத்திற்கான தண்ணீரும் வியாபாரம் ஆகுமானால் நாட்டின் உணவுப் பொருள் விலையும் உயர்ந்து உணவுப் பாதுகாப்புக்கே குழி பறித்துவிடும்.

தண்ணீர் என்பது அடிப்படை மனித உரிமையாக ஆக்கப்படுவது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீர் என்ற உரிமையை நிலைநாட்ட வழியாகும். தண்ணீர் தனியார் மயத்தை ஒழித்து, அதன் மீதான நிலையான பொது உரிமையை நிலைநாட்டினால்தான் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த முடியும். உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணீருக்கான உரிமையை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாது, உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொது சொத்தாக மாற்ற வேண்டும். குடி நீர், விவசாயம்  உள்ளிட்ட அனைத்திற்கும்  அரசு பொறுப்பேற்க வேண்டும். அது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீரை உத்திரவாதப்படுத்தும்.

ஆனால் மத்திய மாநில அரசுகளும், ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஏகதிபத்திய வாதிகளின் தண்ணீர் தனியார் மயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இக்கொள்கைகளால்தான் நீரின் மீது பொது உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. ஆற்று நீர் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை நிறுவ முடியவில்லை. இவ்வாறு தண்ணீரை தனியார் உடைமை ஆக்கி பொது உரிமையை மறுப்பதால்தான் ஆற்று நீர் மீது சட்ட ரீதியாக அரசாங்கக் கட்டுப்பாட்டை கொண்டுவர மறுக்கின்றனர். நதி நீரை முறையாகப் பகிர்ந்து கொள்வதற்கான சட்டத்தைக் கொண்டுவரவோ, நடுவர் மன்றங்களை அமைக்கவோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தவோ மறுக்கின்றனர். தண்ணீர் தனியார் மயமாக்கும் கொள்கையிலிருந்துதான் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஏற்க மறுக்கும் மோடி அரசின் மோசடிகளை புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில் நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக காவிரிச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் ஜனநாயகமற்ற அரசியல் சட்டங்களைத் தூக்கியெறிய வேண்டும். இந்திய அரசு அமல்படுத்தி வரும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை ஒழித்துக்கட்டி நிலத்தின் மீதும், நீரின் மீதும் இறையாண்மையையும், அரசுக் கட்டுப்பாட்டையும் கொண்டுவரும் திட்டங்களையும், தண்ணீரை அடிப்படை மனித உரிமையாக மாற்றும் சட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். ஆறு, குளங்கள், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுவ வேண்டும். தேசிய இனங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தங்களுக்குள் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குத் தடையாக தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்திய அரசிலிருந்து பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் வறட்சியிலிருந்து நாட்டு மக்களை காக்க நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நான்கு மாநில விவசாயிகளையும், ஜனநாயகச் சக்திகளையும் உள்ளடக்கிய அதிகாரமுள்ள மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதை ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசுதான் சாதிக்கும்.

அதற்குத் தயாராகும் அதே வேளையில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஹெல்சிங்கி சமபங்குக் கோட்பாட்டு அடிப்படையில் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், தண்ணீரைத் தனியார் மயமாக்கும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், கர்நாடகா தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும், கீழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

* காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகள் தீராததற்குக் காரணம் இந்திய அரசு கடைப்பிடிக்கும் புதியகாலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளே!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை எதிர்க்கும் மோடி ஆட்சியையும், கர்நாடக அரசையும் எதிர்ப்போம்!
* உடனடியாகக் காவிரி நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடு!
* நான்கு மாநில விவசாயிகளையும், ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் போராடுவோம்!
* அநீதியான நீர்ப் பகிர்வால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கு!
* கர்நாடகத்தில் தமிழர்களின் மீது தாக்குதல் தொடுக்கும் கன்னட இன வெறியர்கள் மீது நடவடிக்கை எடு! தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடு!
* தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரசை தூக்கியெறிவோம்!
* பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனங்களின் கூட்டாட்சிக்காகப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு