Monday, September 23, 2019

‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்



 ‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

விலை : 100/-
சமரன்
9095365292


முன்னுரை


‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (1916-1946) (The Rise and Fall of the Dravidian Justice Party 1916-1946) எனும் நூலை அதன் ஆசிரியர் ஜே.பி.பி.மோரே அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார். இச்சிறு நூல் நீதிக் கட்சியின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய விசுவாசம் பற்றி பேசுவதாலும், நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த பொழுது, ஆந்திரம், கன்னடம், மலையாளம் போன்ற மொழி வழி மாநில கோரிக்கைகள் எழுந்த அளவிற்கு, தமிழ் மொழி வழி மாநில கோரிக்கைகள் எழாமல் போனதற்கு, திராவிடம் என்ற கருத்தியல் தடையாக இருந்தது என்ற சரியான விடயத்தை முன்வைப்பதாலும் இந்நூலை சமரன் பதிப்பகம் வெளியிடுகிறது.  நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவினை திராவிட கட்சிகள் கொண்டாடிகொண்டிருக்கும் இவ்வாண்டில், நீதி கட்சியின் உண்மை சொரூபத்தை ஆதாரப்பூர்வமாக நிறுவும் இந்நூலை வெளியிடுவது பொருத்தமானதாகும்.

இந்நூலில் ஆரியம், திராவிடம் என்ற கருத்தியல்கள் ஐரோப்பிய பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது என்று சரியாக கூறும் ஆசிரியர், ஆரிய-திராவிட இனவியல் தத்துவத்தை வெறும் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினையாக குறுக்குகிறார். இந்த நூலை எழுதுவதற்கான நோக்கமாக அவர் பின்வருமாறு கூறுகிறார்:

“மேலும் அறிஞர்கள்-அறிஞர்கள் அல்லாதவர்களிடையில் கி.பி. 1916இல் ஆரம்பிக்கப்பட்ட பிராமணர் அல்லாதார் இயக்கம் ஒரு முழுமையான திராவிட இயக்கம் என்கிற நோக்கம் நிலவி வருகிறது. இதனால் என்னுடைய இந்த நூலில் இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என ஆராய்ந்துள்ளேன். கி.பி. 1916 முதல் 1946 வரை செயல்பட்ட பிராமணர் அல்லாதார் இயக்கம், திராவிட இயக்கமாக செயல்பட்டதா செயல்படவில்லையா என்பது பற்றியும் விளக்கியுள்ளேன். அதே சமயத்தில் இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ் உணர்வு ஏன் பலப்படவில்லை? தனித் தமிழ் மாநில கோரிக்கை ஏன் எழுப்பப்படவில்லை? என்பவை குறித்தும் ஆராய்ந்துள்ளேன். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் இந்தியாவில் உருவான ‘திராவிடர்’ மற்றும் ‘ஆரியர்’ என்ற சொற்களின் வரலாற்றுப் பின்னணியையும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட ஒரு சில சம்பவங்களையும் உற்றுநோக்குவோம்” என்று கூறுகிறார்.

ஆகவே, ஆசிரியரின் நோக்கம் ஏகாதிபத்திய காலனிய இனவியலைப் பற்றி பேசுவதல்ல. அது குறித்த ஆய்வையும் அவர் செய்யவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளை வெறும் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாத திராவிட இனச் சண்டையாக குறுக்குகிறார். அத்துடன் ‘ஆரியன்’, ‘திராவிடன்’ என்பதை வெறும் சொற்பிரயோகமாகவும், அவற்றின் சொற்பொருள் காரணங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். “கல்கத்தா ஏசியாடிக் சொசைட்டியை சேர்ந்த, வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதம் இலத்தீன், பாரசீகம் மற்றும் கிரேக்க மொழியின் ஆரம்ப வேர்கள் ஒன்றாகும் என்றும், இந்த நான்கு மொழிகளுக்கிடையே நிறைய உறவுகள் உண்டென்றும் அறிவித்தார். இம்மாதிரி மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் முறையால் பிறந்ததுதான் இந்தோ-ஐரோப்பிய (அ) இந்தோ-ஆரிய மொழிகளின் குடும்பம்” என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

மேலும் கால்டுவெல்லைப் பற்றி கூறும்போது, “திராவிடா என்ற சொல்லை அனைத்து தென் இந்தியாவையும் (அ) அனைத்து தென்னிந்திய மொழிகளையும் குறிக்க உபயோகப்படுத்தியதன் மூலம் கால்டுவெல் தமிழ்நாட்டையும் தமிழையும் குறிக்க ‘தமிழ்’ என்ற சொல் பலப்படுவதற்கு வழிவகுத்தார்” என்று கூறுகிறார். இக்கூற்றுகளிலிருந்து நாம் அறிவது யாதெனில் ‘ஆரியன்’, ‘திராவிடன்’ என்று, சொல்லாராய்ச்சி மட்டும் செய்கிறாரே தவிர, இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் எனவும், திராவிட மொழிக் குடும்பம் எனவும் வகைப்படுத்தி, அதை இனங்களுக்குப் பொருத்தி ஆரிய திராவிட இனவியல் கோட்பாடுகளை காலனி ஆதிக்கவாதிகள் உருவாக்கினர் எனும் கண்ணோட்டம் அவரிடம் இல்லை. ஆந்திர அறிஞர் மமடி வெங்கய்யா பற்றி கூறும்போது, அவர் தெலுங்கு மொழிவழி மாநிலத்திற்கு போராடினார் என்று கூறுகிறாரே தவிர, அவர் கால்டுவெல்லின் திராவிட மொழிக்குடும்பக் கொள்கையை மறுத்து, “தெலுங்கு மொழியின் வேர்ச் சொல்லும், தமிழின் வேர்ச் சொல்லும் வேறு வேறு. திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து தெலுங்கு வரவில்லை” என்று பேசியதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே, மொழிக்குடும்பக் கொள்கை பற்றிய அவரது பார்வை குறுகலானதாகவும், அதை காலனிய இனவியல் கொள்கையிலிருந்து பிரித்துப் பார்க்கும் பார்வையுடையதாகவும் உள்ளது. அதனால்தான், ஏகாதிபத்திய காலனி ஆதிக்கக் கொள்கைகளாக ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளைப் பார்க்காமல், வெறும் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாத திராவிட மோதலாக மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் அவரிடம் தென்படுகிறது. இறுப்பினும் இந்த நூலை வெளியிடுவதற்கான காரணம் என்ன? நீதிக்கட்சியின் ஏகாதிபத்திய அடிமைத்தனம் பற்றிய ஆசிரியரின் கருத்து புறக்கணிக்கக் கூடியதல்ல. அதேசமயம், ஆரிய மேன்மைக் கோட்பாடு மற்றும் அதன் ஏகாதிபத்திய சார்பு அரசியல் இயக்கங்களைக் குறித்த அவரது மௌனம் விமர்சனத்திற்கு உரியதாகும். ஆகவே விமர்சனத்துடன் இந்த நூலை வெளியிடுகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் இந்த ஆரிய-திராவிட இனம் குறித்த விவாதத்தின் தேவை என்ன? பதில் எளிமையானது.

ஒரு புறம், இந்து ராஷ்டிரம்-இந்துத்துவப் பாசிசம் போன்ற மிகப் பிற்போக்கான அபாயகரமான ஜெர்மானிய வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆரிய இனவாதம் தீவிரம் பெற்றுவருகின்றது மறுபுறம், அதை எதிர்ப்பது என்ற பேரில் பிற்போக்கான திராவிட இனவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆரிய குத்தீட்டிக்கு எதிராக திராவிடத்தை முன்வைத்த கால்டுவெல்லை போர்வாளாக முன்வைப்பது என்ற போக்கு தலைதூக்குகிறது. ஆனால், இவ்விரண்டு இனவியல் கோட்பாடுகளுமே ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றன; இவை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துத்துவப் பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்ட தடையாக உள்ளன. எனவேதான் இந்த இனவியல் கோட்பாடுகளின் பொருளியல் அடிப்படையைப் புரிந்து கொண்டு விவாதிப்பதும், அம்பலப்படுத்தி அவற்றை முறியடிப்பதும் அவசியமானது. ஆகவே, ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்த ஆரிய-திராவிட மொழியியல்-இனவியல் கோட்பாடுகளின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியமாதலால் அது குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

காலனிய இனவியல் கோட்பாட்டுக்கான பொருளியல் அடிப்படை

15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெர்மனி, பிரிட்டன். பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் டச்சு உள்ளிட்ட 15 நாடுகளில் முதலாளித்துவ ஆட்சிகள் உருவாயின. அந்த 15 நாடுகளிலும் தத்தமது தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட 15 தேசிய அரசுகள் உருவாயின. அந்நாடுகளில் கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அத்தகைய நிறுவனங்கள் அனைத்தும் வணிக முதலாளித்துவ பிரிவுகள் ஆகும். அவை நாடு பிடிக்கும் போரில் இறங்கின. காலனிய நாடுகளுக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் பணி புராதன மூலதனச் சேர்க்கையில் ஈடுபட்டதாகும். புராதன மூலதனச் சேர்க்கை என்பது முதலாளித்துவ வழியில் மூலதனம் சேர்ப்பது அல்ல. அதாவது முதலாளித்துவ முறையில் மூலதனம் போட்டு தொழிலாளர்களின் கூலி உழைப்பின் ஒரு பகுதியை மூலதனமாகச் சேர்ப்பது என்ற கோட்பாட்டிற்கு மாறான வழியில் இரு வர்க்கங்களை உருவாக்கினார்கள். ஒன்று கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தைக் குவித்து முதலாளி வர்க்கத்தையும், அடிமை முறைகளை உருவாக்குவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தையும் உருவாக்கினார்கள்.

முதலில் முதலாளிகளை உருவாக்குவது என்பதை, காலனிய நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடித்து அதன்மூலம் முதலீடு செய்யும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கங்களை உருவாக்கினர். இது ஆதி திரட்சி எனப்படும். அதாவது செல்வங்களைக் கொள்ளையடித்து மூலதனத்தைக் குவித்தனர். இரண்டாவதாக மனிதர்களைக் கொள்ளையடித்து அடிமைத் தொழிலாளர்களை உருவாக்கினர். இத்தகைய தொழிலாளர்களை உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருந்தன. ஒன்று, ஐரோப்பாவைப் பொறுத்த வரை நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து முதலாளித்துவ வர்க்கத்தை உருவாக்குவதன் வாயிலாக விவசாயிகளின் உடமைகளை நீக்கி தொழிலாளர்களை உருவாக்கினர். அது முற்போக்கானதும் புரட்சிகரமானதும் ஆகும். அது நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சி எனும் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகளில் நுழையும்பொழுது தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதன் மூலம் அடிமைத் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கும் வேலையைச் செய்தனர். அவர்களை சிறைப்பிடித்து கொட்டடியில் அடைத்து தமது நாடுகளுக்கும் பிற காலனிய நடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். இவ்வாறாக ஓர் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். இந்த அடிமை வியாபாரத்தை நியாயப்படுத்துவதற்கென்றே இங்கு இனவாதத்தை முன்வைத்தார்கள்.

இது குறித்து, கார்ல் மார்க்ஸ், தனது மூலதனத்தின் முதல் தொகுப்பில் 31-வது தலைப்பில் ப-1011-இல் புராதன மூலதனச் சேர்க்கை என்ற பகுதியில், விரிவாக எழுதியுள்ளார். அதில் காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமை முறைகளை உருவாக்கியதற்கான பொருளியில் அடித்தளம் பற்றி விளக்குகிறார். கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தை சேர்ப்பதையும், அடிமைப்படுத்துவதன் மூலம் கூலித்தொழிலாளர்களை உருவாக்குவதையும் விளக்குகிறார். தொழிலாளர்களை, அடிமை வியாபாரத்தின் மூலம் ஏற்றுமதி செய்யும் முறைகளைப் பற்றி மார்க்ஸ் கூறுகையில், நேரடியாக “கிறிஸ்துவ காலனியாதிக்கம்” என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவ பாதிரியார்களின் வாதங்களையே மேற்கோள்காட்டி, “கிறிஸ்துவ காலனியம்” என்பதை விளக்குகிறார். திருச்சபைகளே அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டதை எடுத்துக்காட்டுகிறார். கிறிஸ்துவத்தையே தனது வாழ்வாகக் கொண்ட வில்லியம் ஹோவிட் எனும் பாதிரியார், கிறிஸ்துவ காலனியாதிக்கம் பற்றிக் கூறியதை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ்.

“கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டிச் செயல்களையும், வெறித்தனமான அட்டூழியங்களையும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும், அவர்கள் எவ்வளவு தான் மூர்க்கமானவர்களாகவும், நெறி புகட்டப் பெறாதவர்களாகவும் இருந்தாலும், கருணை வெட்கம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களாக இருந்தாலும் சரி, உலக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இவற்றிற்கு இணையான அட்டூழியங்கள் புரிந்ததில்லை.”

இவ்வாறு தொழிலாளர்களைக் கைது செய்து, அவர்களை ஏற்றுமதி செய்து கிறிஸ்துவத் திருச்சபைகள் ஏலம் விடுவது எவ்வளவு கொடூரமானது என்பது வரலாற்றுரீதியாக விளக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு அனுப்பியது பற்றி வரலாற்றுரீதியாக எடுத்துரைக்கப்படுகிறது. இதை முதலில் போர்த்துகீசியர்கள் தான் பரங்கிப்பேட்டையில் ஆரம்பித்தனர் என கூறப்படுகிறது. காலனிய முறை என்பது எவ்வாறு இனவாதத்தால் உருவாக்கப்பட்டது என்பதும், இனவாதத்தின் மூலம் எப்படி அடிமைமுறைகள் உருவாக்கப்பட்டன என்பதும் விளக்கப்படுகிறது.


காலனிய இனவாதத்தை முன்வைக்கும் இவர்கள் யார்? அவர்கள் வணிக முதலாளித்துவவாதிகள், தொழில் முதலாளித்துவப் பிரிவினர் அல்லர். இவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள்? எதன் அடிப்படையில் செய்தார்கள்?

முதலாளித்துவ முறைக்கு விரைவாக மாறிச்செல்லும் பொருட்டு, அதாவது நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் நிகழ்வுப்போக்கை விரைவுபடுத்தும் பொருட்டே இத்தகைய காலனிய முறைகளைப் பயன்படுத்தினர். காலனிய இனவியலை விமர்சனம் செய்யும் பல ஆய்வாளர்களும் இனவியலின் இந்தப் பொருளியல் அடித்தளத்தை எடுத்துக் காட்டுவதில்லை. அதை வெறும் மத அடிப்படையில், மத ஒடுக்குமுறை வடிவமாக மட்டுமே இக்கொள்கைகள் செயல்படுத்தப்படுவதாக பார்க்கின்றனர்.

கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற வணிக முதலாளித்துவப் பிரிவினர் இத்தகைய அடிமைமுறைகளை உருவாக்குவதற்கு இனவாதத்தை எத்தகைய முறைகளில் கட்டியமைத்தனர்? முதலாவதாக உடலியல் கூறுகளைக் கொண்டு அதாவது நிறம், முகத்தோற்றம், மூக்கின் நீளம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை ஆண்டான் அடிமைகள் என வகைப்படுத்தினர். இதன் மூலம் அடிமைமுறைகளைப் புகுத்தினர். இந்த அடிமைமுறைகளுக்கான அடிப்படை பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளிலேயே அடங்கியுள்ளது. நோவா பெருவெள்ளம், ஹாம் சந்ததியினர் மீதான சாபம், பேபல் கோபுரம் போன்ற பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளை காலனியாதிக்கக் கொள்கைகளாகப் பயன்படுத்தினர். பெருவெள்ளம் வடிந்த பிறகு, திராட்சை இரசம் அருந்தி ஆடையின்றிக் கிடந்த நோவாவைப் பார்த்து பரிகசித்துவிட்ட அவரது மகன் ஹாமும் அவரது சந்ததியும், மற்ற இரு மகன்களான ஷெம், ஜெப்பேது-வின் சந்ததியினருக்கு அடிமைகளாகக் கடவது என்பதே சாபம்.

ஹாம் சந்ததியினர் கருப்பு நிறத்தார், அழகற்ற உடலியல் கூறுகளைக் கொண்டவர்கள்; அவர்கள் வெள்ளைநிற, அழகான உடலியல் கூறுகளைக் கொண்ட அவரது சகோதரர்களின் வம்சத்திற்கு அடிமைகளாக சேவை செய்து தமது பாவத்தை போக்கிகொள்ள வேண்டும் என்று கூறினர். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்த மோசேவின் இனவியல் தர்மம், மனுவின் வர்ண தர்மத்திற்கு நிகரானது.

இரண்டாவதாக, கிழக்கிந்திய கம்பெனி அரசுகள், மக்களை இனவாத வழியில் பிளவுபடுத்துவது, முரண்பாடுகளை உருவாக்கி அம்முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்ற வழியில் தங்களது அரசு அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். மேற்கண்டவாறு நிறம் உள்ளிட்ட உடலியல் கோட்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதலைத் தொடர்ந்து மூலமொழி மற்றும் மொழிக் குடும்பம் போன்ற மொழியியலில் கோட்பாடுகளை முன்வைத்து இனங்களை வகைப்படுத்தினர்.

ஆரிய இனவாதம்

வில்லியம் ஜோன்ஸ் எனும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதி Third Anniversery Discourse Asiatic Reasearches vol -1, 1788 page 415-431 எனும் நூலில் ஒரே வேர்ச்சொல், மூலச் சொற்கள் என்று ஆய்வு செய்து, ஒரே மூலச்சொற்களைக் கொண்டவைகளையெல்லாம் ஒரு மொழிக் குடும்பம் என்று வரையறுத்தார். அந்த வரையறையின்படி இந்தோ ஆரிய மொழிகள் ((Indo-Aryan Languages)) ஒரே மொழிக் குடும்பமாக வகைப்படுத்தினார். இந்த வகைப்படுத்துதலுக்கு அவர் “பேபல் கோபுரக் கதைகளையே” அடிப்படையாக கொண்டார். விவிலியத்தின் பேபல் கோபுரக் கதையின்படி, ஆண்டவருக்கு எதிராக பாபிலோனியர்கள் பேபல் கோபுரத்தை கட்டியதாகவும், அங்கு ஒரே மொழியை பேசியவர்கள் மத்தியில் பல மொழிகளை ஏற்படுத்தி குழப்பத்தை தோற்றுவித்து உலகம் முழுதும் பல பகுதிகளுக்குப் பிரிந்து செல்லுமாறு ஆண்டவர் செய்தார் என்பதே இந்த ஐதீகக் கதையின் சுருக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே மூல மொழிக் கொள்கை மற்றும் மொழிக் குடும்பக் கொள்கையை உருவாக்கினார். ஆரிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி சமஸ்கிருதம் என்று கூறினார். இம்மொழிகளைப் பேசுவோர் ஒரே இனம்; இந்தோ ஆரிய இனம் என மேக்ஸ் முல்லர் தனது “The Languages of the seat of war in the east -London-william Norgate 1855” எனும் நூலில் வரையறுத்தார். இவ்வாறு இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பது ஆரிய மொழிக் குடும்பமாக வகைப்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களின் ஒற்றுமை என்ற அடிப்படையில் ஆரிய மொழிக் குடும்பத்தை வரையறை செய்ததோடு மட்டுமின்றி, காலனியாதிக்கத்தை திணிப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆரிய மேன்மை-ஆரிய மேலாதிக்கக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அதாவது ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள்; ஆளப்பிறந்தவர்கள்; அவர்கள்தான் உலகத்தில் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கொண்டுவந்தவர்கள் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இங்ஙனம் ஐரோப்பிய காலனிய மேலாதிக்கத்திற்கு ஆரிய மேன்மை என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலமொழித் தேடலின்போது, சமஸ்கிருதமே மூலமொழி என்று கூறி இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தில் சமஸ்கிருதத்தையும் இணைத்துக்கொண்டு, இந்தியாவிலிருந்த ஆரியரையும் இணைத்துக் கொண்டு ஆரிய மேன்மை பேசினர்.

பின்பு காலனிய ஆதிக்கமும்-காலனிய ஆட்சியும் தோன்றிய பிறகு, இனத்தூய்மை பேசி ஜெர்மன் இனம்தான் உண்மையான ஆரிய இனம் என்று கூறி, இந்தியாவிலுள்ள ஆரியர்களை-அதாவது பார்ப்பனர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம்-அதாவது பார்ப்பனர்களிடையே சாதிமுறையும், உருவ வழிபாடும் தோன்றி எல்லாவிதப் பிற்போக்கும் வந்து விட்டதால் இவர்களை ஆரியர்களாக ஏற்க முடியாது என்றனர்; அதாவது ஆரியத் தூய்மையை இழந்துவிட்டனர் என இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளி இவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். ஜெர்மனியில்தான் ஆரியத் தூய்மை நிலவுகிறது; எனவே உலகத்தை ஆளப் பிறந்த இனம் ஜெர்மானிய இனம்தான் எனும் கோட்பாட்டை நிறுவினர். ஆரிய மொழி அல்லாத பிற மொழிகளையும், பிற மொழிக் குடும்பங்களையும், இந்தியாவைச் சார்ந்த பார்ப்பனர்களையும் ஆரியர்களுக்கு அடிமைகளாகவே பார்த்தனர். ஆனால் பார்ப்பனர்களோ தாங்களும் ஆரியர்கள்தான் என்று உரிமை கோரி பெருமை கொண்டாடுகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இவர்களை எட்டி உதைத்தாலும் உதைத்த காலை நக்கிப் பிழைக்கிறார்கள்.

காலனியாதிக்கத்தின் நுகத்தடிக்குள் பார்ப்பனர்களைக்கொண்டு வந்து அடிமைப்படுத்தவேண்டும் என்பதால் அவர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. காலனியாதிக்கவாதிகள் இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளினாலும் தாங்களும் ஆரியர்கள்தான் என உரிமை கோருவது இவர்களிடம் உருவான தரகுசித்தாந்தத்தையே காட்டுகிறது. பார்ப்பனர்கள் உயர்மட்டத்தில் இருந்த நிலை என்பது போய் அவர்கள் ஆரியர்கள் இல்லை என அவர்கள் இழிவுபடுத்தினாலும் நாங்களும் ஆரியர்கள்தான் என இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் ஆரியர் என்றால் அது ஐரோப்பிய ஆரியர்களைத்தான் குறிக்கும். பார்ப்பனர்களை அல்ல.

இக்கோட்பாட்டிற்கு பலம் சேர்க்கும் விதமாக “தூய இனவாதத்தை” கோபினியு தனது “மனித இனங்களின் சமத்துவமின்மை குறித்த கட்டுரைகள் (1853-55)” எனும் நூலில் முன்வைத்தார். அவர் பின்வருமாறு கூறுகிறார்: “வெள்ளை இனம்தான் அனைத்து பண்டைய நாகரிகங்களுக்கும் ஆதாரமானது. வெள்ளை இனத்துடன் பிற இனங்கள் கலந்ததே அனைத்து நாகரிகங்களும் அழிவதற்குக் காரணம். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மானிய இனம் மட்டுமே தூய்மையானது”. இந்தக் கோட்பாடே, நாஜிக் கட்சி உருவாவதற்கு காரணம் ஆனது. இதைக் கொண்டே கோல்வால்கர் இங்கு இனத்தூய்மையைப் பேண இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என இந்துத்துவ பாசிசம்-இந்து ராஷ்டிரத்தை முன்வைத்தார்.

இந்தியாவிற்கு வரும்பொழுது, ஆரிய மொழிக் குடும்பம்-சமஸ்கிருதம் அல்லாமல் பிற மொழிகள் பேசுவோரும்  வாழ்ந்து வந்தனர். அம்மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அவை ஆரிய மொழிக் குடும்பத்திற்கு கீழானவைகளாக கருதப்பட்டன. அதேபோன்று காலனியாதிக்கவாதிகள் பல நாடுகளுக்குச் சென்றனர்; ஆப்பிரிக்க கண்டத்திற்குச் சென்றனர். இந்த நாடுகளிலுள்ள மக்களை இந்த ஆய்வு அடிப்படையிலான இனவாதக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் அடிமைகளாக மாற்றினர். அத்துடன் ஆரிய மூலத்திற்கு பழைய ஏற்பாட்டின் மூன்று ஐதீகக் கதைகளைப் பயன்படுத்தினர். நோவா, ஊழிப்பெருவெள்ளம், பேபல் கோபுரம் போன்ற கதைகளின் அடிப்படையில் காலனியாதிக்கக் கோட்பாடுகளை உருவாக்கி காலனியாதிக்கத்தை-காலனிய அரசுகளை நிறுவினர்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் உலகின் பல இடங்களில் காலனிகளை உருவாக்கிய பொழுது, அவர்களின் மிஷினரிகளும் வியாபாரிகளும் மேற்கின் பண்பாட்டிற்குத் தொடர்பற்ற வேறு விதமான கலாச்சாரங்களையும் மனித சமுதாயங்களையும் எதிர்கொண்டனர். நோவாவின் மூன்று மகன்கள் மற்றும் அவர்களுடைய சந்ததிகள் குறித்த ஐதீகக் கதைகளுக்குள் உலகின் பிற பண்பாட்டு சமுதாயங்களை அடைக்கும்படியான விவரணைகளை அவர்கள் உருவாக்கினார்கள். உதாரணமாக, இந்தியாவின் பூர்வகுடி ஆரியர்கள் ஹாமின் சந்ததிகள் எனவும், பெரு வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் இந்தியாவிற்கு குடியேறினர் எனவும், பிரிட்டிஷ் காலனியாதிக்கம் என்பது அவர்களை மீண்டும் விவிலியத்திற்குள் மீட்கவே எனவும் கதைகளைப் புனைந்தனர். இராமனை ஹாமின் சந்ததியான ராஹ்மா-உடன் ஒப்பிட்டு, வெள்ளம் வடிந்த பிறகு இராமன் தலைமையில் இந்திய மக்கள் இங்கு குடியேறினர் எனவும், பேபல் கோபுரத்தைக் கட்டிய நிம்ரோத் மன்னனே விஷ்ணு அவதாரம் எனவும் கதைகள் எழுதினர்.

ஒவ்வொரு பண்பாடும் தம் தோற்றம் பற்றியும் தன்மைகள் பற்றியும் கொண்டிருந்த தொன்மங்களும் வழக்குகளும் மூடநம்பிக்கைகள் எனவும், முட்டாள்தனமான கதைகள் எனவும் தூக்கி எறியப்பட்டன. ஐரோப்பியர் அல்லாத ஒவ்வொரு பண்பாட்டிற்குமான உண்மையான வரலாற்றை உருவாக்கும் பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஐரோப்பியர்களின் வரலாற்றுக் கடமை என்று கருதப்பட்டது, இந்த கடமையை நிறைவேற்றும் பொழுது கருப்புத் தோல் கொண்ட மக்கள் அனைவரும் ஹாமின் சந்ததிகளாக வகைப்படுத்தப்பட்டு நாகரீகமற்ற, உயர் பண்பாடு அற்ற, ஒழுக்கத் தன்மையற்ற, அதே சமயத்தில் தந்திரபுத்தியும் வஞ்சகமும் கொண்ட அடிமைகளாக அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாகக் கருதப்பட்டனர்.

திராவிட இனவாதம்

இந்தியாவில் அதன்பிறகு ஒரு பிரச்சினை எழுகிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் ஆரியர்கள் நுழையும் முன்பே சிந்துசமவெளி நாகரீகம் இருந்தது என 1924-இல் கண்டறியப்பட்டது. இங்கு பூர்வகுடிகளான தமிழர்கள், மங்கோலியர்கள் போன்ற இனங்கள் வசித்து வந்தன. இவர்களின் நாகரீகம் ஆரியரின் நாகரீகத்தை விட மேலானதொரு நாகரீகம் ஆகும். ஆரியர் வருகையில் இங்கு நாகரீகம் மேம்பாடு அடையவில்லை. வெள்ளையர் நாகரீகத்தால் இவர்கள் மேன்மையடையவில்லை. மாறாக அவர்களின் வருகையால் இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். ஆகவே, ஆரிய மேன்மைக் கோட்பாடு அடித்து நொறுக்கப்பட்டது.

எல்லிஸ் எனும் காலனியாதிக்கவாதி “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லைக் கொண்டவை. அவை சமஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்டவை” என வகைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதியும், சமய பரப்பாளருமான ராபர்ட் கால்டுவெல் என்பவர், தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளையும் உள்ளடக்கி “திராவிட மொழிக்குடும்பம்” என “தென்னிந்திய(அ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் வகைப்படுத்தினார். இம்மொழிகளைப் பேசுவோர் திராவிட இனம் என சொன்னார். இந்த வாதத்தை ஆந்திராவைச் சேர்ந்த மமடி வெங்கையா எனும் அறிஞர் மறுக்கிறார். “திராவிட தமிழ் மொழியைச் சார்ந்தது அல்ல தெலுங்கு மொழி” என்கிறார் அவர். அதாவது தெலுங்கு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் வேர்ச் சொற்கள் வேறு வேறு; திராவிட மொழிகளிலிருந்து தெலுங்கு வந்ததல்ல; தனித்தனி மொழிகள்தான். ஒரு மொழிக் குடும்பம் என்ற கோட்பாட்டை அவர் ஏற்கவில்லை. ஆரியக் கோட்பாட்டில் ஜோன்ஸ் கும்பலால் என்ன முன்வைக்கப்பட்டதோ அதே கோட்பாட்டையே கால்டுவெல் பேசுகிறார். எனவே திராவிட மொழியியல்- இனவியல் கோட்பாடு ஆரிய மொழியியல்-இனவியல் கோட்பாட்டிற்கு மாறானது அல்ல. அந்த கோட்பாட்டின் அடிப்படையிலியே கால்டுவெல் இக்கோட்பாட்டை முன்வைக்கிறார். நாம் ஜோன்ஸ்-கால்டுவெல் கும்பலின் ஆரிய, திராவிட மொழியியல்-இனவியல் கோட்பாட்டை நிராகரிக்கிறோம்.ஒரே வேர்ச்சொல், இலக்கண ஒற்றுமை என்பதன் அடிப்படையில் ஒரே மொழிக்குடும்பம் (அ) மூல மொழிக்கொள்கை என வரையறுப்பது மார்க்சியத்திற்கு புறம்பானது என ஸ்டாலின் “மொழியியல் குறித்து மார்க்சியம்” ( J.V Stalin -Marxism on Linguistics- 1950 July 20 ) எனும் நூலில் கூறுகிறார்.

அதன் பிறகு, பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்கள் குறிப்பாகச் சொன்னால் ரிக் வேத கால ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா? இங்கேயே பிறந்தவர்களா? வெளியில் இருந்து வந்தவர்கள் எனில் படையெடுத்து வந்தார்களா? ஊடுருவினார்களா? ஆகிய கேள்விகள் எழுந்தன.

கால்டுவெல், ஜோன்ஸ், முல்லர் போன்ற காலனியாதிக்கவாதிகள் ஆரியர்கள் இங்கேயே இருந்தவர்கள் அல்ல என்றும், வெளியில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் என்ற நிலைபாட்டை முன்வைத்தனர். ஆரியர்கள் திராவிடர்கள் என இரண்டு இனங்களாக வரையறுத்து, இந்திய வரலாற்றையே ஆரிய-திராவிட வரலாறாக முன்வைத்தனர். இவர்கள்தான் மொழியியல் அடிப்படையில் இனத்தை வகைப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது ஆரிய மொழிகள் பேசுவோர் ஆரிய இனம், திராவிட மொழிகள் பேசுவோர் திராவிட இனம் என வகைப்படுத்தினர். இதனடிப்படையில்தான் பூலேவும், பெரியாரும் நிலை எடுத்தனர். அதாவது ஆரியர்கள் வந்தேறிகள்; படையெடுத்து வந்து இந்திய பூர்வகுடிகளை வென்று அடிமைப்படுத்தினார்கள்; ஆரிய திராவிடப் பகைமை தான் இந்திய வரலாறு என்ற காலனியாதிக்க கோட்பாட்டை ஏற்றனர். பெரியார் மற்றும் பூலேவின் வாதத்தை மறுத்து அம்பேத்கார் சரியான நிலையை எடுத்தார்.

காலனிய இனவாதத்தை மறுக்கும் அம்பேத்கார்

அம்பேத்கார் இது குறித்து “சூத்திரர் யார்?” என்ற நூலில் விரிவாக பின்வருமாறு கூறுகிறார்:

1) ஆரிய இனக் கோட்பாடு அதன் ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்து வருகிறது. அது அறிவியல் கண்டுபிடிப்புகளின் வக்கிரம்.

2) ஆரிய இனம் போன்ற எத்தகைய இனத்தையும் வேதங்கள் அறிய மாட்டா.

3) ஆரிய இனம் இந்தியாவின் மீது படையெடுத்துவந்து இந்தியாவின் பூர்வகுடிகளான தாசர்கள் மற்றும் தஸ்யூக்களை வென்று கீழ்படுத்தினார்கள் என்பதற்கு வேதங்களில் எவ்விதச் சான்றுகளும் இல்லை.

4) ஆரியர்கள், தாசர்கள், தஸ்யூக்கள் இடையிலான வேறுபாடு இன வேறுபாடு என்பதற்கான சான்றுகள் இல்லை.

5) ஆரியர்கள் மேனி வண்ணத்தில் தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்ற வாதத்தை வேதங்கள் ஏற்கவில்லை.

மேலும் “மொழிக் குடும்பம் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் இனக்கோட்பாடு தவறு. இவை அனைத்தும் புராணக் கதைகளின் அடிப்படையில் பேசுவது; அறிவியல் பூர்வமானதல்ல. இது இன வகைப்பட்டதல்ல” என்று இந்த நிலைப்பாட்டை எதிர்க்கிறார். மேலும் ரிஸ்லே என்பவர் “வர்ணம்-சாதியே இனம்” என்ற கோட்பாட்டை முன்வைத்தார் (பி பி ஸிவீsறீமீஹ் 1841, 259). அதையும் அம்பேத்கார் மறுக்கிறார். “சாதியே இனமாகாது; மாறாக சாதி சமூக வகைப்பட்டது” என்கிறார். “பஞ்சாபைச் சேர்ந்த பார்ப்பனருக்கும் மதராஸைச் சார்ந்த பார்ப்பனருக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? அதேபோல் மதராஸைச் சேர்ந்த பார்ப்பனரும் பறையரும் ஒரே மரபினம் தான்” என மறுக்கிறார். ஆனால் அம்பேத்காருடைய ஆய்வு முறையானது மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருளியல் அடிப்படையில் அவர் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் அம்பேத்கார் சாதியை இன வகையாகப் பார்க்காமல் சமூக வகையாகவே பார்க்கிறார். இது ஒரு சரியான அம்சமாகும். ஆனால் அவரும் தன்னுடைய ஆய்வு முறையில் சமூக பொருளாதார ஆய்வு முறைகளை எடுத்துக்கொள்ளாமல் மதத்தையும், மத இலக்கியங்களையும் மட்டுமே எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யும் முறையை மேற்கொள்கிறார். அவர் எண்ணமுதல்வாத முறைகள் மூலமே ஆய்வு செய்கிறார். இருப்பினும் இனவாதக் கோட்பாட்டை மறுப்பதன் மூலம் ஒரு நேர்மறையான பாத்திரம் வகிக்கிறார்.

காலனிய இனவாதத்தின் விளைவே ஆரிய மாயை திராவிட மாயை

1) ஆரிய மாயையால், காங்கிரஸில் திலகர் முதல் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையார் வரை, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும், பிற்போக்கையும் நிலைநாட்டினார்கள்.

2) ஆரிய மேன்மை, தூய இனவாதத்தால் உருவான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்துத்துவம், ஜெர்மன் பாசிசத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு இந்துத்துவ பாசிசமாக வடிவம் பெற்றது. இந்து என்பவன் யார்? என்ற பிரசுரத்தில் சாவர்க்கர் தரும் விளக்கம் வருமாறு:

“இந்து என்பவன் இந்தியாவை தந்தை நாடாகவும் (பித்ரு பூமி) புனித நாடாகவும் கருதவேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் புனித பூமி அரேபியாவிலும், பாலஸ்தீனத்திலும் இருப்பதால், அவர்கள் பித்ரு பூமியை புண்ணிய பூமியாக கருத இயலாது. கம்யூனிஸ்டுகளுக்கு நாடென்பதே கிடையாது. ஆகவே இவர்களை வெளியேற்றவேண்டும்.”

அதன் பிறகு, 1930 களில், ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாசிச சக்திகளுடன் கூட்டு வைத்தது இந்த கும்பல். இனத்தூய்மை எனும் பெயரில் யூதர்களைக் கொன்றொழித்தது போலவே, இங்கு இஸ்லாமியர்களைக் கொன்றொழிக்கவேண்டும் என்று கோல்வால்கர் கூறுகிறார். இதை “நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்” எனும் நூலில் அடால்ப் ஹிட்லர் பாணியில் அவர் விளக்குகிறார்:

“இன்று எல்லோரும் ஜெர்மனியின் தேசிய கர்வத்தைப் பற்றி பேசுகிறார்கள். தன் தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்கவைத்துக்கொள்ள, ஜெர்மனி செமிட்டிக் இனங்களை (யூதர்களை) அழித்து உலகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கே மிக உயர்ந்த அளவில் தேசிய கர்வம் காணப்படுகிறது. அடிப்படையில் வேறுபாட்டை கொண்டுள்ள இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக சேர்ந்து வாழ்வது அநேகமாக முடியாது என்பதையே ஜெர்மனி எடுத்துக் காட்டுகிறது. இந்துஸ்தானில் இருக்கும் நமக்கு கற்கவும் லாபம் அடையவும் அது ஒரு நல்ல பாடம்.”

இந்த பிற்போக்கான தத்துவத்தைக் கொண்டே இசுலாமியர்களைக் கொன்றொழித்து வருகிறது இந்தக் கும்பல்.

3) திராவிட மாயை மற்றும் திராவிட இனவாதத்தின் விளைவாக தமிழ் தேசிய இனத்திற்கும், அதன் சுயநிர்ணய உரிமைக்கும் பெருங்கேடு ஏற்பட்டது. பெரியார், காங்கிரசில் இருந்தபொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோஷலிச சமதர்ம கருத்துக்கள் பேசத்துவங்கினார். ரசிய பயணத்திற்குப் பிறகு அது தீவிரமடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு சென்றார். இதுவும் அவரின் சரியான அம்சமே ஆகும். சீர்திருத்தவாதியாக இருந்தவரை அவரை அனுமதித்த பிரிட்டிஷ் அரசு, அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிசக் கருத்துகளை அவர் கைவிட்டார். பிறகு நீதிக்கட்சியில் இணைந்து ஏகாதிபத்திய தாசராக மாறினார். சமதர்மப் பாதையைக் கைவிட்டதற்கான காரணம் குறித்து பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

“சர்க்கார் வலிமையானது. அது நம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் இனி புத்தியுடன் செயல்படவேண்டியுள்ளது. ....ஆகவே சுயமரியாதை இயக்கமே இன்றைய தேவை. ....இது ஜீவா மற்றும் சிங்காரவேலருக்கு பிடிக்காது. என்ன செய்வது? வேறு வழி இல்லை”

என தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தினார். இவ்வகையில் காவுத்ஸ்கி, பிரசந்தா, பெரியார் மூவரும் ஒன்றே. தனது ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தந்து, தனது சுயமரியாதையின் வர்க்கப் பண்பை வெளிப்படுத்துகிறார்:

“வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால்-சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் சொன்னார்.” (வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65) ஆம்! கொள்கையைத் துறப்பதற்கும் துணிவு வேண்டும் அல்லவா?

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் இரத்தச் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்தபொழுது, நீதிக்கட்சி இங்கு எச்சில் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்தது .

இங்கு ஏற்கனவே நிலவிவந்த பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பூசல், கால்டுவெல் வருகைக்கு பின்பே ஆரிய-திராவிட இனவாத வடிவம் பெற்றது. இரண்டுமே காலனி ஆதிக்க அடிமைத் தத்துவங்களே. கற்பனையான பழைய பிற்போக்கு பைபிள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு காலனி ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்த ஆரிய-திராவிட இனவாதத் தத்துவங்களை நீதிக்கட்சியும், பெரியாரும், அண்ணாதுரையும் வரித்துக் கொண்டனர்.

இந்த திராவிட இனவாதம்தான், இந்தியாவை மூன்றாகப் பிரிக்கும் இந்துஸ்தான், திராவிடஸ்தான், பாகிஸ்தான் எனும் இனவெறிக் கோட்பாடுகளுக்கு இட்டுச்சென்றது. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்ட பிறகு, மொழிவழி மாநிலம் அமைந்தது. பொது மொழியும் பிரதேசமும் அற்ற திராவிட தேசியம் காலாவதியான பிறகு அண்ணாதுரையால் திராவிட இனவாதம் பின்வருமாறு மறுவரையறை செய்யப்பட்டது: “வர்ணாசிரமத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள். ஏற்காதவர்கள் திராவிடர்கள்” என முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு, காலனியாதிக்க ஆதரவு திராவிட மரபினவாதம், தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் பெருங்கேடு ஏற்படுத்தியது. இந்தி மொழி எதிர்ப்பு எனும் பெயரில் பிவீஸீபீவீ ழிமீஸ்மீக்ஷீ ணிஸீரீறீவீsலீ ணிஸ்மீக்ஷீ என்று ஆங்கில மொழி அடிமைத்தனத்திற்கும், ஆங்கில மொழியை நிலையான ஆட்சி மொழியாக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றது. மேலும் செம்மொழி எனும் கூப்பாடு தமிழுக்கு இவர்கள் செய்த துரோகத்தை மூடிமறைப்பதேயாகும். திராவிடக் கட்சிகள் இந்துத்துவப் பாசிச கும்பலுடன் கைகோர்த்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றன.

ஆகவே, ஆரிய-திராவிட மாயை இரண்டுமே அன்றும் இன்றும் என்றும் காலனிய இனவியலுக்கு சேவை செய்பவையே ஆகும். அன்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தன; இன்று அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் சேவை செய்கின்றன. வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. ஆரியம் திராவிடம் இரண்டும் ஏகாதிபத்தியம் கள்ளத்தனமாக ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் ஆகும். ஒன்று வெள்ளைக் குழந்தை; இன்னொன்று கருப்புக் குழந்தை. ஒன்று காவி மடம்; இன்னொன்று கருப்பு மடம். இவையிரண்டையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே மொழிவழி தேசியத்தை கட்டியமைக்க முடியும்; கட்டியமைக்க வேண்டும். இதை ஆழமாக மனதில் நிறுத்தியே, மூரேவின் இந்த நூலை வாசிக்க வேண்டும்.
ஏ.எம்.கே.
சமரன்
 http://senthalamsamaran.blogspot.com/2019/09/blog-post.html


விலை : 100/-
சமரன்
9095365292

Tuesday, August 27, 2019

செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!




செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

  • ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பனிப்போரால் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியின் விளைவே பாசிசம்!
  • ஏகாதிபத்திய நிதிமூலதன நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரப்படுத்தும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
  • நாட்டை அந்நிய நிதிமூலதனத்திற்கு திறந்துவிட்டதன் எதிர்விளைவே…மோட்டார் வாகன தொழிற்துறை வீழ்ச்சி!  ஆலைமூடல்! ஆட்குறைப்பு!!       தலைவிரித்தாடும் வேலையின்மை!
  • ஏகாதிபத்திய நலனுக்காக காஷ்மீர் உள்ளிட்ட தேசிய இனங்கள் துண்டாடப்படுவதை எதிர்ப்போம்! தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
  • என்.ஐ.ஏ., உபா, தேசிய பாதுகாப்புச் சட்டம், இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டங்கள் உள்ளிட்ட பாசிச அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
  • குருகுலக் கல்வி மற்றும் மெக்காலே கல்வியின் ஒருங்கிணைந்த அழுகிய புதிய காலனிய வடிவமான தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!
  • சிறுபான்மை மதத்தினர், தாழ்த்தப்பட்டோர் மீதான சாதி, மதவெறி பாசிச ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவோம்!
  • வேளாண் நெருக்கடிக்கும், விவசாயிகளின் தற்கொலைக்கும் காரணமான கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்
  • மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மீது தாக்குதல் நடத்தும் எதிர்புரட்சிகர, கலைப்புவாத டிராட்ஸ்கியத்தை முறியடிக்க புரட்சிகர சக்திகள் ஒன்றுபட்டு போராடுவோம்!
  • மீளவே முடியாத நெருக்கடியில் செத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்புவோம்! சோசலிசத்தை படைப்போம்!!
செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!
ஏகாதிபத்திய நிதிமூலதன நெருக்கடிகயைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரப்படுத்தும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
அப்பு-பாலன் சிலைக்கு மாலை அணிவித்தல்
தருமபுரி, நாயக்கன்கொட்டாய், மதியம் 2 மணி
தலைமை : தோழர் மாயக்கண்ணன்
ம.ஜ.இ.க., தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்
கொடியேற்றுதல்: தோழர் சோமு
ம.ஜ.இ.க., சேலம்-நாமக்கல்-ஈரோடு மாவட்ட அமைப்பாளர்
     சிறப்புரை: தோழர் குணாளன், ம.ஜ.இ.க., வேலூர் மாவட்ட அமைப்பாளர்
அரங்கக் கூட்டம்
RK திருமண மண்டபம், வார சந்தை அருகில், தருமபுரி, மாலை 4 மணி
தலைமை : தோழர் முருகன், ம.ஜ.இ.க., பென்னாகரம்
சிறப்புரை:
                   தோழர் சோமு, ம.ஜ.இ.க., 
                                                சேலம்-நாமக்கல்-ஈரோடு மாவட்ட அமைப்பாளர்
தோழர் குணாளன், ம.ஜ.இ.க., வேலூர் மாவட்ட அமைப்பாளர்
தோழர் சின்னவன், ம.ஜ.இ.க., பாலக்கோடு
தோழர் ரணதீபன், ம.ஜ.இ.க., தஞ்சை மாவட்ட அமைப்பாளர்
தோழர் ஆறுமுகம், ம.ஜ.இ.க., ஈரோடு
            தோழர் சசிகுமார், ம.ஜ.இ.க., கடலூர்-விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்
தோழர் பூபதி, ம.ஜ.இ.க., கோவை,
தோழர் சேல் முருகன், வழக்கறிஞர், ம.ஜ.இ.க., சென்னை
தோழர் தங்கமணி, பாப்பாநாடு, தஞ்சை மாவட்டம்
நன்றியுரை: தோழர் மாதையன், தருமபுரி.

                           மக்கள் கலைமன்ற கலை நிகழ்ச்சி நடைபெறும்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Tuesday, April 9, 2019

புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி தலைமையிலான பா.ஜ.க.-அ.தி.மு.க. அணியை வீழ்த்துவோம்!


புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி தலைமையிலான பா.ஜ.க.-அ.தி.மு.க. அணியை வீழ்த்துவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

17-வது நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கி உள்ளோம். தமிழகத்தில் பாஜக - அதிமுக ஓரணியாகவும், காங்கிரஸ் - திமுக ஓரணியாகவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

‘வளர்ச்சி’ முழக்கத்தை முன்வைத்து கடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பாசிச நடவடிக்கைகள்தான் வளர்ச்சியடைந்தன. இதற்குக் காரணம் என்ன?

அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு வெடித்துக் கிளம்பிய உலக முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்திய நாடுகள் இன்னும் மீளவில்லை. அமெரிக்கா இராணுவ ரீதியில் பலம் பெற்றிருந்தாலும், வர்த்தகப் பற்றாக்குறையால் பொருளாதார ரீதியாக சரிந்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் வளர்ந்து வரும் இரசிய-சீன ஏகாதிபத்தியத்திற்கும் இடையில், உலகை மறுபங்கீடு செய்து பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்வதற்கானப் ‘பனிப்போர்’ முயற்சிகள் துவங்கிய பிறகு அமெரிக்காவின் உலக மேலாதிக்க கனவு தகர்ந்து வருகிறது. எனவே, அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும் இரசிய-சீன முகாமிற்கும் இடையில் ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகளில் செல்வாக்கு மண்டலங்களை நிறுவி எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டியும் முரண்பாடுகளும் கூர்மை அடைந்துள்ளன. இதனால் ஏகாதிபத்திய நாடுகளில் வலதுசாரி பாசிசம் தீவிரம் அடைந்துவருகிறது.

அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து, அங்கு மக்கள் நடத்திய போராட்டங்களை டிரம்ப் கும்பல் இனவெறி பாசிசத்தின் மூலம் ஒடுக்கிவருகிறது. அமெரிக்கா தனது நெருக்கடிகளின் சுமைகளை மோடி ஆட்சியின் மூலம் இந்திய மக்கள் மீது சுமத்துகிறது; புதிய காலனிய-புதிய பொருளாதார ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்துகிறது. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்களின் போராட்டங்கள் அலை அலையாக வெடித்துக் கிளம்பியதை அடுத்து, மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசத்தைத் தீவிரப்படுத்தி மக்கள் போராட்டங்களைப் பிளவுபடுத்தி நசுக்க முயற்சிக்கிறது. இதுவே இந்தியாவில் பாசிச அடக்குமுறைகள் தீவிரம் பெற்று வருவதற்கான பொருளியல் அடிப்படையாகும்.

அமெரிக்க ஏகாதிபத்திய புதியகாலனிய சேவையில் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி

வெள்ளை மாளிகையின் ‘சௌகிதார்’ (காவலாளி) மோடி கும்பல், அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்கு அனைத்து துறைகளையும் பலி கொடுத்தது மட்டுமின்றி, இந்தியப் பாதுகாப்புத் துறையையும் அமெரிக்காவிற்கு அடகு வைத்ததுவிட்டது. ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’, ‘வேக்கப் இந்தியா’ போன்ற ‘இந்தியாக்கள்’ மோடியின் வாய்ச்சவடால்களாக படுதோல்வி அடைந்தன. இந்திய-அமெரிக்க இராணுவ உடன்படிக்கையை 10 ஆண்டுகளுக்கு நீடித்ததை அடுத்து, இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எனப்படும் நான்கு அடிப்படை ஒப்பந்தங்களில் (Foundational Agreements) மோடி கும்பல் கையெழுத்திட்டுள்ளது. 1) தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் (Information Security Agreement - ISA); 2) இராணுவத் தளவாடங்கள் பரிமாற்ற ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum Agreement - LEMoA); 3) பரஸ்பர ராணுவத் தொலைத்தொடர்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (Communication, Compatability and Security Agreement - COMCASA); 4) அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் (Basic Exchange and Co-operation Agreement - BECA). இந்த நான்கு ஒப்பந்தங்கள் மூலம் இந்தியப் பாதுகாப்புத்துறை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இனி பாதுகாப்புத் துறை சம்பந்தமாக எந்த ஒரு முடிவையும் இந்திய அரசு சுயேச்சையாக எடுக்க முடியாது. இந்த நான்கு ஒப்பந்தங்களும், தெற்காசியாவில் சீன மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்ட இந்தோ - பசிபிக் கூட்டமைப்பும் (Indo - Pacific Partnership), இந்திய அமெரிக்க அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களும், நாட்டின் அரைகுறை இறையாண்மையைக் கூட குழிதோண்டிப் புதைத்து, அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்தங்களின் தேர்க்காலில் இந்தியாவைப் பூட்டியுள்ளன. இதுமட்டுமின்றி இந்தியாவின் அனைத்துத் துறைகளும் அமெரிக்க நிதிமூலதன ஆதிக்கத்திற்குப் பலியிடப்படுகின்றன.

-  வேளாண் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி, கார்ப்பரேட் விவசாயம், மானிய வெட்டு, வங்கிக் கடன் மறுப்பு, இடு பொருட்கள் விலை உயர்வு, நதிகள் தனியார்மயம் போன்ற நடவடிக்கைகளால் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவது பெருகிவிட்டது. ‘சுதந்திர தேவி’ மகனின் ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை 40% அதிகமாகிவிட்டது.

-   பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கார்ப்பரேட் கொள்ளை ஊக்குவிக்கப்பட்டு 5 லட்சம் கோடி கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளது; இத்துடன் ஜிஎஸ்டி வரி விதிப்பும் சேர்ந்து பல லட்சம் சிறு - குறு தொழில்களை அழித்து, அமைப்புசாராத் தொழில் துறையைப் பெருமளவில் ஒழித்துக் கட்டியது. மறுபுறம் கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை 12 லட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது.

-    அமெரிக்க முதன்மை பாதுகாப்புக் கொள்கைக்கு ஏற்ப ‘திறப்புக் கொள்கை’ மூலம் (Open Door Policy) இந்தியாவின் சந்தை வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி மூலம் வரிவிதிப்பும் சந்தையும் மையப்படுத்தப்பட்டு மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டு உள்ளது. நீட் சட்டம் மூலம் மாநில அரசுகளின் உயர்கல்வி உரிமைகளைப் பறித்து விட்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமானது சில்லறை வர்த்தகத்தை ஒழித்து இந்திய வணிகம் மீதான மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளைத் தகர்த்து பல லட்சம் வணிகர்களின் வயிற்றில் அடித்துள்ளது ‘டிஜிட்டல் இந்தியா’ மோடி கும்பல்;

-  பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டிவிட்டது. பொது மக்களின் வருமானமும் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சியடைந்து விட்டது. உலகில் சமச்சீரற்ற ஏற்றத்தாழ்வான வளர்ச்சி உள்ள நாடுகளில் இந்தியாவை முதல் இடத்திற்கு தள்ளிவிட்டது ‘ஸ்மார்ட் இந்தியா’ மோடி கும்பல்;

- கல்வி, மருத்துவம், வங்கிகள் உள்ளிட்ட சேவைத் துறைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது;

-    நாட்டின் இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள், மனித வளங்கள் அனைத்தையும், பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் ‘ஆதி மூலதன திரட்டல்’ வடிவில் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன;

-    ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாய்ச்சவடால் அடித்த மோடி ஆட்சியில் 4 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

இவ்வாறு மோடி கும்பலின் ஐந்தாண்டு கால ஆட்சியானது, அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்க நலன்களுக்கும், அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட்களின் நலன்களுக்கும் காவு கொடுத்ததால், நெருக்கடிகள் தாளாமல் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் நாடெங்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களை சாதி-மத ரீதியாக பிளவுபடுத்தி நசுக்கவே இந்துத்துவ பாசிச அடக்குமுறைகளை தீவிரப்படுத்தியது மோடி - ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

  · விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டங்களை நசுக்கி படுகொலை செய்தது. டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக நிறுத்தியது;

     ·   அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் திருத்தி, தொழிலாளர்களை கொத்தடிமை முறைக்கு ஆட்படுத்தியதைத் தொடர்ந்து தீவிரமடைந்த போராட்டங்களை ஒடுக்கியது;

    ·  தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்த துணை இராணுவப் படைக்கு சிறப்பு அதிகாரச் சட்டம் வழங்கி, வடகிழக்கு மாகாணங்கள் மீதும் காஷ்மீர் மீதும் உள்நாட்டு யுத்தம் நடத்தியது;

    ·  வெமுலாக்களும், அனிதாக்களும் தற்கொலைக்கு தள்ளப்பட்டு ஆசிபாக்களும், கோவை நிதன்யஸ்ரீக்களும் வண்புணரப்பட்டு ‘கிளீன் இந்தியாவின்’ குப்பைத் தொட்டிகளில் குப்பையாக வீசப்பட்டது;

  ·  இந்து மதவெறியை தேசபக்தியாக உருவகப்படுத்துவது, முத்தலாக் தடை, லவ் ஜிகாத் எதிர்ப்பு, மாட்டுக் கறித் தடை, இந்துத்துவத்தை எதிர்த்த எழுத்தாளர்கள் படுகொலைகள், ‘பசு பாதுகாப்பு’ எனும் பெயரில் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கூட்டுப் படுகொலை செய்யப்படுவது;

  · சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (UAPA), எஸ்மா-டெஸ்மா மற்றும் தேசவிரோதச் சட்டங்களை ஏவியது;

  · இந்தி-சமஸ்கிருத-ஆங்கில மொழித் திணிப்புகள் மூலம் தேசிய மொழிகளை நசுக்கி வருவது;

     ·   ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சந்தை, ஒரே வரி, இறுதியாக ஒரே ‘சுடுகாடு’ என்று அனைத்து மாநில அதிகாரங்களும் மத்திய அரசுகளின் கைகளில் குவிக்கப்பட்டு பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காக பாசிச அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியது ‘பாரத மாதா கி ஜே’ மோடி ஆட்சி.

இவ்வாறு நாட்டைச் சுடுகாடாக்கிய மோடி கும்பல் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் பொருட்டு ‘புதிய இந்தியா’ என்று போலி முழக்கத்தை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் அணி, மோடி அணிக்கு மாற்றாக மதச்சார்பற்ற அணியாக முன் நிறுத்தப்பட்டு வருகிறது. மோடியின் காலாவதியான ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை ராகுல் இப்போது முழங்குகிறார்.

பாஜக அணிக்கு மாற்று காங்கிரஸ் அணி அல்ல!!
காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே!

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், வேளாண்மைக்கான தனி பட்ஜெட், எதிர்ப்புள்ள மாநிலங்களில் நீட் ரத்து போன்ற பல ‘வர்ணமய’ வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கைக்கான மாற்றுத் திட்டமோ, மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதற்கானத் திட்டமோ ஏதும் வைக்கவில்லை. புதிய காலனிய - புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டே காங்கிரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? எனில் நிச்சயம் முடியாது.

காங்கிரசு ஆட்சியில்தான் அரசு எந்திரம் முதலில் மதவாத மயமாக்கப்பட்டது; ஆர்.எஸ்.எஸ் - மதவாத சக்திகள் வலிமை பெற்றனர்; பாபர் மசூதி இடிப்பிற்கு கள்ளத்தனமாக ஆதரவு தந்தது; இடித்தவர்களை விடுதலை செய்தது; குஜராத் கலவரம், கோத்ரா இரயில் எரிப்பு குற்றவாளிகளை தண்டிக்க மறுத்தது; “இந்துத்துவமே மதச்சார்பின்மைக்கு மிகச்சிறந்த சக்தி வாய்ந்த பாதுகாவலன்” என்று காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியது; காரியவாத அடிப்படையில் மதவாதத்தை கையாள்வது, 2000 சீக்கியர்களைக் கொன்றது; ஒரு லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்வதற்குத் தலைமைத் தாங்கியது; காஷ்மீர், வட கிழக்கு மாகாணங்கள் மீது உள்நாட்டு யுத்தம் நடத்தி பல லட்சம் பேரைக் கொன்றது, பல ஆயிரம் பெண்களை வன்புணர்வு செய்தது, சாதி, மதக் கலவரங்களுக்கு தலைமைத் தாங்குவது என காங்கிரஸ் கட்சியும் அரசு பயங்கரவாதத்தையும், தேசிய வெறியையும், தேசிய சுயநிர்ணய உரிமை மறுப்புக் கொள்கையையும், இன்னும் பல ஜனநாயக விரோத பாசிசக் கொள்கைகளையும் கடைபிடித்து வரும் கட்சிதான். சுருங்கக் கூறின், பாஜக இந்தியப் பாசிசத்தின் ஒருபக்கம் எனில், காங்கிரஸ் அதன் மறுபக்கம் ஆகும். காங்கிரசும், பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள் ஆகும்.

காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம், உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகள், இந்திய - அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல புதிய காலனிய அடிமை ஒப்பந்தங்களை பாராளுமன்ற முறைகளை தூக்கி எறிந்துவிட்டு அமல்படுத்தி நாட்டை நாசமாக்கியதும், அதற்கேற்ப காரியவாத மதவாதம் மற்றும் பெருந்தேசியவெறி பாசிசத்தை முதன் முதலில் கட்டியமைத்ததும் காங்கிரஸ் கும்பல்தான். அண்மையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு, பசு திருட்டு எனும் பெயரில் இஸ்லாமிய இளைஞர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. ராகுல் அமைக்கப் போவதாக சொல்லும் மதச்சார்பற்ற அரசின் லட்சணம் இதுதான். எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அது மோடி ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருக்கும்; அதனால்தான் காங்கிரஸ் அணி மாற்று அல்ல என்கிறோம்.

மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகளின் நிலைபாடுகள்

மோடி கும்பலின் எடுபிடி ஆட்சியாக செயல்பட்டு வரும் எடப்பாடி கும்பல் எதிர்பார்த்தபடியே பாஜக அணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கிறது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு, மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டம் என அனைத்துப் போராட்டங்களிலும், மோடி கும்பலின் அடியாளாக செயல்பட்டு ஒடுக்கியது; தமிழக நலன்களைக் காவு கொடுத்து; அதிமுகவின் தேர்தல் அறிக்கை மாநில உரிமைகள் பெரும்பாலும் பறிக்கப்பட்டுள்ளதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மத்திய அரசுக்கு ஒத்தடம் தரும் அறிக்கையே ஆகும். தமிழீழ விடுதலைப் போரை கருவறுத்த காங்கிரசுக்கு வாலாட்டுவது; எழுவர் விடுதலைப் பற்றி நாடகம் ஆடுவது; தமிழ் மொழியை இணை மொழியாக்கும் கோரிக்கை;  ஸ்டெர்லைட், எட்டு வழிச் சாலை மற்றும் மீத்தேன் திட்ட அனுமதியில் மத்திய அரசுக்குத் துணை போனது போன்ற பித்தலாட்டங்களும், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ துரோகங்களும்தான் கருணாநிதி-ஸ்டாலின் கும்பலின் உடன்பிறப்பாகும். திமுக, அதிமுக உள்ளிட்ட எல்லா மாநிலங்களின் தரகு முதலாளித்துவக் கட்சிகளும், புதிய காலனிய தாராளக் கொள்கைகளுக்கும், பாஜகவின் இந்துத்துவ பாசிசத்திற்கும், காங்கிரசின் பெருந் தேசிய வெறிப் பாசிசத்திற்கும் துணைபோகும் கட்சிகள்தான். இவை மத்திய அரசின் தொங்கு சதைகளாக விளங்கும் கட்சிகளே. காங்கிரஸ் - பாஜக தேர்தல் வாக்குறுதிகளே கார்ப்பரேட்களின் கண் அசைவிற்கு காத்திருக்கும்போது, பிராந்தியக் கட்சிகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

வன்னிய சாதிவெறி ராமதாஸ் கும்பலும், பச்சோந்தி வைகோவும், கிருஷ்ணசாமி, திருமாவளவன் தலைமையிலான தலித்திய அமைப்புகளும், சிபிஎம் சிபிஐ போன்ற திருத்தல்வாதக் கட்சிகளும், ஏதாவது ஒரு பாசிசக் கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சிகளே ஆகும்.

பிற அமைப்புகளின் நிலைபாடுகள்

பு.இ.மு பாசிச மோடியின் இந்து பார்ப்பனிய தேசியமே பிரதான எதிரி என்று கூறி பாசிச காங்கிரசு, திமுக அணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்ற திருத்தல்வாத நிலைபாட்டை எடுத்துள்ளது. மக்கள் அதிகாரம் ‘கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில்‘ என்று கூறி மறைமுகமாக பாசிச காங்கிரசு, திமுக அணியை ஆதரித்து வந்த நிலையில் தற்போது கட்டமைப்பை மாற்றுவது என்ற தன்னியல்பு செயல்தந்திரத்தை முன்வைத்து, காங்கிரசு மிதவாத-பாதி இந்துத்துவா என்று சொல்லி பாசிச காங்கிரசு அணிக்கு முட்டுக்கொடுக்கிறது. பாராளுமன்றத்திற்கு வெளியே கட்டியமைக்கப்படும் பாசிசத்துக்கு பாராளுமன்றமே ஒரு ஜனநாயக திரையாக விளங்குகிறது; பாசிசத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே பாட்டாளிவர்க்கத் தலைமையில் கட்டப்படும் ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியால்தான் வீழ்த்தமுடியும்.

பாட்டாளி வர்க்க நிலைபாடு

மோடி கும்பல் செயல்படுத்தி வந்த அமெரிக்க ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதரவு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும், பாசிச நடவடிக்கைகளும் பத்தாண்டுகால மன்மோகன்-சோனியா கும்பலின் பாசிச ஆட்சியின் தொடர்ச்சியே ஆகும். அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனச் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தி வாழ விரும்பும் இந்திய தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையே இந்திய அரசு பாசிச வடிவம் எடுப்பதற்கான பொருளியல் அடிப்படையாகும். பாசிசத்தின் வடிவங்களை மட்டுமே இவ்விரு கட்சிகளும் தீர்மானிக்க முடியும். இந்திய அரசை ஒரு இந்துத்துவப் பாசிச அரசாகக் கட்டமைப்பதா அல்லது பெருந்தேசிய வெறி பாசிச அரசாக கட்டமைப்பதா என்பதில்தான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு ஆகும். அவற்றை ஆதரிக்கின்ற கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடும் அதுவே ஆகும்.

இந்தியாவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அயலுறவுக் கொள்கைகளை மக்களவைப் பிரதிநிதிகளுக்குக் கூடத் தெரியாமல், உயர் அமைச்சரவைக் குழுவும் அதன் அதிகாரவர்க்கக் குழுவும் இணைந்த சிறு கும்பல்தான் பாராளுமன்ற முறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு தீர்மானித்து செயல்படுத்துகிறது. பாராளுமன்றத்திற்கு இதன் மீது வாக்கெடுப்பு நடத்தக் கூட அதிகாரம் இல்லை. இதை அரசியல் சட்டமே கூட அனுமதிக்கிறது. உதாரணமாக காங்கிரஸ் ஆட்சியில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது பாராளுமன்றம் ஓட்டெடுப்புடன் கூடிய வாதத்தை நடத்தக் கூட அரசியல் சட்டப்படி அனுமதியில்லை என்று மறுக்கப்பட்டது. மோடி ஆட்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைப் பற்றிய அறிவிப்பு பாராளுமன்றத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் கூட தெரியாமல் அறிவிக்கப்பட்டது.

நடப்பில் இருக்கும் பிற்போக்கான தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறையே ஒரு சிறு கும்பலின் எதேச்சதிகாரத்திற்கு வித்திடுவதாக உள்ளது. பா.ஜ.க. கடந்த தேர்தலில் 31 சதவீத வாக்குகளை மட்மே பெற்று ஆட்சியமைத்தது. மாறாக விகிதாச்சார தேர்தல் முறை இருக்குமானால் சென்ற தேர்தலில் பா.ஜ.க. வாங்கியுள்ள வாக்குகளில் சதவீத அடிப்படையில் அக்கட்சிக்கு வெறும் 169 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 44க்குப் பதில் 105 இடங்களும், மாயாவதியின் கட்சிக்கு ‘0’க்குப் பதில் 23 இடங்களும், தி.மு.க.விற்கு 10 இடங்களுக்கு மேலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9க்குப் பதில் 18 இடங்களும் கிடைத்திருக்கும். அ.தி.மு.க.வுக்கு 37க்குப் பதில் 13 இடங்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு 34க்குப் பதில் 21 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். எனவே விகிதாச்சார தேர்தல் முறை என்பது ஒப்பீட்டளவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் பிரிவினருக்கும் வாக்குகளின் சதவீதத்திற்கேற்ப எந்தளவுக்குப் பிரதிநிதித்துவம் பரவலாகக் கிடைக்குமோ அந்தளவுக்கு எதேச்சதிகார ஆட்சி முறையைக் கட்டுப்படுத்தப் பயன்படும்.

விகிதாச்சாரத் தேர்தல் முறை மட்டுமில்லாமல், முதலாளித்துவ நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவுமான உரிமை, பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கும் முறைகளும் கூட இங்கில்லை. இதைக் கூட திருத்தல்வாத கட்சிகளோ, முதலாளித்துவ கட்சிகளோ, பாராளுமன்ற பங்கேற்பு பற்றி பேசுகிற மா-லெ அமைப்புகளோ கோருவதற்குத் தயாராக இல்லை.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும், தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்க உரிமையும் எவ்வளவுதான் பரந்த ஜனநாயகத் தன்மை கொண்டிருப்பினும் அது எதேச்சதிகார முறையை முற்றாக ஒழிக்கப் பயன்படாது. அந்த முறையும் முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கக் கூடியதுதான். ஏனெனில் பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு மட்டுமே இது செயல்படுத்தப்படுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை போன்றவற்றிற்கு இது செயல்படுத்தப்படுவதில்லை. எனவே இதுவும் முற்றாக ஜனநாயகத்தை வழங்காது. மக்களுக்கு உண்மையில் அதிகாரம் வழங்கக் கூடிய, உண்மையான ஜனநாயக அமைப்பு முறை என்பது சோவியத் ஜனநாயக ஆட்சி முறையே ஆகும்.

இன்றைய நமது கடமை என்ன?

பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றைக் கட்டி பாசிசத்தை எதிர்த்துப் போராடவும், அதைப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான முன்னணியாக வளர்த்தெடுக்கவும் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்த முன்னணியை உருவாக்க வேண்டும். ஏனெனில் பாசிச எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். அவ்வாறு பிரிப்பது பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டுவதற்கும் அதை புதிய ஜனநாயகப் புரட்சிக்கான அணியாக வளர்த்தெடுப்பதற்கும் தடையாக மாறும். புதிய காலனி ஆதிக்க ஒடுக்குமுறைகள் மற்றும் பாசிச அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டு உழல்கின்ற வர்க்கங்களான விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் மாணவர்கள், மீனவர்கள், பெண்கள், சிறு குறு முதலாளிகள், பணக்கார விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் பிற பரந்துபட்ட ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய ஒரு முன்னணியே பாசிச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தும். எனவே இத்தகைய ஒரு முன்னணியை உருவாக்கி பாசிசத்தை எதிர்த்துப் போராடவும், புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கவும் பின்வரும் முழக்கங்களின் பால் அணிதிரளுமாறு மேற்கண்ட அனைத்து பிரிவினரையும் அறைகூவி அழைக்கிறோம்.

புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி தலைமையிலான பா.ஜ.க.-அ.தி.மு.க. அணியை வீழ்த்துவோம்!

  « மோடி அணிக்கு மாற்று பாசிச காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அல்ல!

  « தொழிலாளர்கள், விவசாயிகள், பரந்துபட்ட ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைத்து 
            பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டியமைப்போம்!

  « தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் அதிகாரமுள்ள சோவியத் வடிவிலான 
            மக்கள் ஜனநாயகக் குடியரசமைக்கப் புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

       மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு      

தொடர்புக்கு: தோழர் ஸ்டாலின், 3/20, அண்ணா தெரு, மேட்டுக் குப்பம், வானகரம், சென்னை-98 செல்: 8903847800
 ஏப்ரல் 2019