Friday, April 20, 2012

கொடுங்கோல் ஜெயா அரசே!

« பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறு!
« ஆட்சிக்கு வந்தப்பின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!
« மூடநம்பிக்கையில் வாக்களித்த மக்களே! இப்போதாவது உணர்ந்துப் போராட முன்வாருங்கள்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசாங்கம் அண்மையில் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. இக்கட்டண உயர்வு மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் மீது கூடுதலாக ரூ.7,874 கோடி சுமையை சுமத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குப்பின் வெறும் ரூ.740 கோடியை மட்டும் குறைத்து கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டுக் கொடுமையோடு இந்த கட்டண உயர்வும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்துக் கட்டணத்தையும், பால் விலையையும் கடுமையாக உயர்த்தி மக்கள் மீது ரூ.11,000 கோடியை சுமத்தினார். பட்ஜெட்டில் ரூ.1,500 கோடிக்கு புதிய வரியையும் விதித்தார். இவ்வாறு தொடர்ந்து கட்டண உயர்வுகள் மற்றும் விலை உயர்வுகள் மூலம் மக்கள் மீது தாங்கமுடியாத அளவிற்கு சுமைகளைச் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா. இந்தச் சுமைகளைத் தாங்க முடியாமல் தமிழக மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.