Tuesday, May 8, 2018

புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைக்குச் சேவை செய்யும் ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!

புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைக்குச் சேவை செய்யும் ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
இந்துத்துவப் பாசிச பாஜக-வின் மோடி தலைமையிலான அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் 10 D என்ற பிரிவைச் சேர்த்து மருத்துவக் கல்வியில் சேருவதற்கான ‘நீட்’ (NEET) நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி அமல்படுத்தியுள்ளது.
ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் இந்தியாவின் உயர்கல்வியைக் கொள்ளையடிப்பதற்காக மிகவும் மோசடியாக நடத்தப்பட்ட இந்த ‘நீட்’ தேர்வு முறைதான் அனிதா போன்ற ஏழைஎளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கியது. படுகொலை செய்தது. இந்த நீட் தேர்வுமுறை எதற்காக கொண்டுவரப்பட்டது? யார் தீர்மானித்தது? இதற்கு பின்னுள்ள அரசியல் பொருளியல் காரணிகள் என்ன?.
புதியதாராளக் கொள்கை மற்றும் உலகமயமாக்களால் 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது. இதன் விளைவாக அந்நாடுகளில் உயர்கல்வி கடும் நெருக்கடியைச் சந்தித்தது. உயர்கல்விக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவிகள் குறைக்கப்பட்டன. கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளக்குறைப்பு, லே-ஆப், ஆட்குறைப்பு என கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. நெருக்கடிக்குள்ளான உயர்கல்வி நிறுவனங்களை மீட்பதற்கு, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் கல்விச் சந்தையைக் கைப்பற்றவேண்டும். இதன் காரணமாகவே, உலகளவில் அமெரிக்க மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கல்விச் சந்தையாகத் திகழும் இந்தியாவின் சந்தையைக் கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் துடிக்கிறது. இந்நெருக்கடியானது இந்தியக் கல்விச்சந்தையைக் கைப்பற்ற வேகப்படுத்தினாலும், இது 2005ஆம் ஆண்டு WTO-GATS ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் உயர்கல்விச் சந்தையில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்கான தொடர் நிகழ்வுபோக்கின் வெளிப்பாடாகும். இந்தியாவின் கல்விச் சந்தை 2016இன் கணக்குப்படி 140 பில்லியன் டாலர்களாகும். இந்தச் சந்தையின் மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவச்செய்வதுதான் WTO-GATS ஒப்பந்தமும் ‘நீட்’ தேர்வும்.
ஏகாதிபத்தியக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு உயர்கல்வியைத் திறந்துவிடும் இந்திய அரசு
1985-86ஆம் ஆண்டுகளில் ராஜீவ்காந்தி ஆட்சியில் புதிய தாராளவாதக் கொள்கைகளை இந்தியாவில் புகுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றபோது அதற்கு ஏற்ற வகையில் தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையானது உருவாக்கப்பட்டது. 1986 இல் இக்கல்விக் கொள்கை மூலம் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்து மட்டத்திலும் புதிய தாராளவாதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
1991இல், நரசிம்மராவ் ஆட்சியில் உலகமயமாக்கல் என்ற பெயரில் ஏகாதிபத்திய மூலதனத்தின் தடையற்ற கொள்ளைக்கு இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சேர்ந்து கல்வி, சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்துச் செலவினங்களையும் வெட்டிக் குறைக்க நிர்பந்தித்து, அந்நியக் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கான அடிப்படைகள் உருவாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உயர்கல்வியில் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 1998ஆம் ஆண்டில் யுனெஸ்கோ மாநாடு ஒன்றில் உரையாற்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி “உயர்கல்வி என்பது தனி நபருக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது, சமுதாயத்திற்கு அல்ல; இதனால் அதற்கான கட்டணங்களை மாணவர்கள் கொடுத்துத்தான் தீர வேண்டும். கல்வி என்பது ஒரு வணிகப் பொருள், அதனை வாங்கும் மாணவர்கள் வாடிக்கையாளர்கள்; அதில் அரசு தலையிடக் கூடாது” எனக் கூறி கல்வி வழங்குவது அரசின் கடமை என்ற பொறுப்பிலிருந்து விலகி தனியார்மயத்தை நியாயப்படுத்தினார்.
இதன் பிறகு அம்பானி-பிர்லா சேர்ந்து உயர்கல்வி குறித்தும் அதை எப்படி கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கு கொண்டுவருவது என்பது குறித்தும் ஓர் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தனர். அது கல்வித் துறையில் - அரசின் கொள்கையில் சில முக்கியத் திருத்தங்களைக் கோரியது.
1.         கல்வி என்பது சமூக நலனுக்கானது அல்ல, அது சந்தைக்கானது;
2.         உயர் கல்வியை உலகச் சந்தை எடுத்துக் கொள்ளும்.
இனி கல்வி வழங்குவதை பன்னாட்டு முதலாளிகளும் சந்தைகளும்தான் தீர்மானிக்கும் எனக் கூறி கல்வியை வணிகமயமாக்குவதற்கானத் திட்டத்தை முன்வைத்தது அம்பானி-பிர்லா அறிக்கை.
உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) மூலம் மூன்றாம் உலக நாடுகளில் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏகாதிபத்தியங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள சேவைத்துறை முழுவதையும் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்த முறைதான் காட்ஸ் (GATS). இந்தப் பின்னணியிலிருந்துதான் நமது உயர் கல்வி ‘காட்ஸ்’ ஒப்பந்தத்திற்குத் தாரைவார்க்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு ‘தோகா’வில் நடந்த, உலக வர்த்தகக் கழகம் கூட்டிய நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில் கல்வித்துறை சார்பாக சில முன்மொழிதல்களை (offers) மன்மோகன் கும்பல் வழங்கியது. 75க்கும் மேற்பட்ட நாடுகள் மறுத்துவிட்ட நிலையில், இந்தியா கல்வித் துறை முழுவதையும் அமெரிக்க ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் துரோகத்தைச் செய்தது. இந்த காட்ஸ் (GATS) ஒப்பந்தம் ஒரு அடிமை ஒப்பந்தமாகும்.
மேற்கண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் கல்வித்துறையைச் சூறையாடுவதற்கானத் தடைகள் என உலக வர்த்தகக் கழகம் பின்வருவனவற்றை முன்வைத்தது. “தேசிய இன அடிப்படையிலான தடைகள், பாடத்திட்டம், நேரடி முதலீட்டுக் கட்டுப்பாடுகள்” போன்ற தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று நிர்பந்தித்தது.
உலக வர்த்தகக் கழகத்திற்கு அடிபணிந்து, மேற்கண்ட தடைகள் அகற்றப்பட்டன. புதிய காலனியக் கல்விக் கொள்கைக்கு சேவை செய்ய, தேசியக் கல்விக் கொள்கையில் உயர்கல்வியைப் பன்னாட்டுமயமாக்குதல் என்ற பேரில், இந்தியக் கல்வித் துறையை காட்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் முன்மொழிதல்களுக்கு செயல்வடிவம் கொடுத்தது மோடி கும்பல். அதன் ஒரு அம்சம்தான் ‘நீட்’ தேர்வுமுறை.
உலக வர்த்தகக் கழகம் (WTO) என்ன சொல்கிறதென்றால், நாங்கள் நிதி மூலதனத்தை ஒரு நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அந்த நாட்டின் எந்தவொரு சட்டமும் தடையாக இருக்கக் கூடாது. இந்தியா போன்ற கூட்டாட்சிமுறையைப் பின்பற்றக் கூடிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு பாடத்திட்டம், வெவ்வேறு தேர்ச்சிமுறை என்று வைத்திருப்பது எங்களுக்கு சரிப்பட்டு வராது, பொதுவான வரையறைகளைக் கொண்டு வந்தால் மட்டுமே எங்களது வேட்டைக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர். அவர்களுக்கு ஏதுவாக, உலக வர்த்தகச் சந்தையின் கீழ் இந்தியக் கல்வியை மாற்றிக் கொடுக்கும் ஏற்பாடுகளில் ஒன்றுதான் இந்த ‘நீட்’ தேர்வுமுறை.
‘நீட்’ தேர்வு என்பது இந்தியாவில் WTO-GATS ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான ஒரு வழியாகும். மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு முழுவதையும் ‘நீட்’ என்ற ஒற்றைத் தேர்வு முறையின் கீழ் கொண்டுவருவதுடன், அரசாங்க நிதியை வெட்டுவதன் மூலம், மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதார அமைப்பு முறையைச் சீர்குலைக்கிறது. திறமை, தகுதி, தரநிர்ணயம் (ஷிtணீஸீபீணீக்ஷீபீவீக்ஷ்ணீtவீஷீஸீ) என்ற பெயரில் சமூக நீதிக் கொள்கையை ஒழித்துக்கட்டுகிறது. ‘நீட்’ தேர்வு முறை ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களை மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் முதல் முறையாக மருத்துவக் கல்வியைத் திறந்துவிட்டுள்ளது மோடி கும்பல்.
உயர்கல்வி முழுவதையும் வணிகமயமாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டதுதான் இந்த ‘நீட்’ தேர்வுமுறை. இதை மருத்துவக் கல்வியில் மட்டும் அல்லாமல் உயர்கல்வி முழுவதும் செயல்படுத்த முயற்சிக்கின்றனர்.
இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் இளநிலை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் சில காலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளது. இந்த ‘நீட்’ தேர்வு முறையால் அந்த சட்டம் காலாவதியாகிவிடுகிறது. இனிமேல் மருத்துவர்கள் கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே கிராமங்களுக்கு மருத்துவர்கள் கிடைக்காமல் மக்களுக்கு அரசு மருத்துவம் கிடைக்காத நிலை ஏற்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் மருத்துவமனைகளாக மாற்றப்படும்.கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் இளநிலை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு உயர் சிறப்பு மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு சுகாதாரத்துறை சீர்குலையும் அபாயத்தில் உள்ளது.
ஏழைஎளிய மாணவர்களுக்கும், சாதி ரீதியான ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியே என்பதை ‘நீட்’ தேர்வு முடிவுகள் நமக்கு உணர்த்தியுள்ளது. பள்ளிக்கே போகாமல் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பல லட்சம் செலவு செய்து டியூஷன் படித்துவிட்டு மருத்துவராகலாம். ஏழைஎளிய ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்வி மறுக்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து சமூக நீதியை தூக்கில் தொங்கவிட்டுள்ளது இந்த ‘நீட்’ தேர்வுமுறை.
மோடி கும்பல், ஏகாதிபத்தியக் கார்ப்பரேட் கம்பெனிகள் கல்வித் துறையைக் கபளீகரம் செய்வதற்கு வசதியாக உயர்கல்வி முழுவதையும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டது. ‘நீட்’ தேர்வு மூலம் மருத்துவ மாணவர் தேர்வை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தைப் (State Board) புறக்கணித்து மத்தியப் பாடத்திட்ட (சிஙிஷிணி) முறையில் தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து மத்தியில் குவித்துக்கொள்ளும் ஒரு எதேச்சதிகாரப் போக்காகும். இதனை எதிர்த்து கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப் போராடுவது உடனடி பணியாகும்.
ஏகாதிபத்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு குறிப்பாக அமெரிக்க நிதி மூலதன கும்பல்களுக்கு இந்திய நாட்டின் உயர்கல்வியைத் தாரைவார்த்ததிலும் ‘நீட்’ தேர்வைத் திணித்ததிலும் காங்கிரசும் பாஜகவும் ஒன்றுதான். இரண்டுமே தேசத்துரோகக் கட்சிகளே. அதிமுக, திமுக போன்ற மாநிலக் கட்சிகள் அனைத்தும் இந்தத் துரோகத்துக்குத் துணைபோகும் கட்சிகளே. சிபிஐ, சிபிஎம் கட்சிகள் நீட் தேர்வை மாநிலங்கள் அவையில் எதிர்த்து வாக்களிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் எதிர்த்தாலும் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு நிலை எடுத்து ஒரு சந்தர்ப்பவாத நிலைபாட்டை மேற்கொள்கின்றன. தமிழ்த்தேசியம் பேசுகின்ற இயக்கங்கள் ஏகாதிபத்தியக் கார்ப்பரேட் ஆதிக்கத்தை மூடிமறைத்து, வெறும் மாநில உரிமை மற்றும் சமூகநீதிப் பிரச்சினையாக மட்டுமே முன்நிறுத்துகின்றனர். இவர்கள் அனைவருமே பின்நவீனத்துவ அடையாள அரசியலை முன்நிறுத்தி, ஏகாதிபத்திய புதிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தைத் திசைதிருப்புகின்றனர்.
‘நீட்’ தேர்வை எதிர்த்த போராட்டம் மோடியின் இந்துத்துவத்தை எதிர்த்தப் போராட்டமாகக் குறுக்கிவிடமுடியாது. வெறும் பார்ப்பன எதிர்ப்பாகப் பார்ப்பது ஏகாதிபத்தியத்தை மூடிமறைக்கும் வேலையாகும்.
எனவே கிராமப்புற சுகாதாரத்தைக் காக்கவும் கல்வித் துறையில் சமூக நீதியையும் மாநில உரிமையையும் மீட்டெடுக்கவும், ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்வியில் சேர்வதற்குத் தடையாக உள்ள ‘நீட்’ தேர்வை எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டம் சாராம்சத்தில் ஏகாதிபத்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் புதிய காலனியக் கல்விக் கொள்கையை எதிர்த்த, உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்த போராட்டமாகும். ஆகவே மாணவர்களும் உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் கீழ்க்காணும் முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் திரண்டு போராட அறைகூவி அழைக்கிறோம்.
புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைக்குச் சேவை செய்யும் ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!
ê  கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும், சமூக நீதியை ஒழிக்கும்,
ê  மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும்நீட்தேர்வைத் திரும்பப் பெறு!
ê  புதிய காலனிய உயர்கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!
ê  இந்திய அரசே! உலக வர்த்தகக் கழகத்தை (WTO) விட்டு வெளியேறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

நவம்பர் 2017



No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.