Saturday, February 3, 2018

தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!

தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

கிரிமினல் மாஃபியா ஜெயாவின் சிஷ்ய கோடிகள் எடப்பாடி-பன்னீர் ஆட்சி பேருந்துக் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தி ஏழை எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாத சம்பளத்தில் 25 சதவீதத்தை பேருந்துக் கட்டணத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகளால் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள மக்கள் மீது பேரிடியாக இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு இறங்கியுள்ளது.

தற்போதைய இந்தக் கட்டண உயர்வுமட்டுமல்ல, எதிர்காலத்தில் ஜி.எஸ்.டி. வரியை வசூலிக்கவும், டீசல் விலை உயர்வு அல்லது பிற காரணங்களால் பேருந்துக் கட்டணங்களை ஆண்டுதோறும் அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் அரசாங்கத்தைக் கேட்காமல் அதிகாரிகளே உயர்த்திக் கொள்ளலாம் என்ற துரோகத்தையும் துவக்கி வைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பொம்மைகளாக்கி கட்டணங்களை உயர்த்தும் அதிகாரத்தை அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைத்துவிட்டது. நித்தம்நித்தம் கட்டண உயர்வு என்ற அதிர்ச்சியில் மக்களைத் தள்ளியுள்ளது. இந்த அநியாய பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளன.

பேருந்துக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு சொல்லும் காரணம் என்ன?

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன என்று எடப்பாடி அரசு கூறுகிறது. டீசல் மற்றும் மசகு எண்ணெய் விலை உயர்வுகள், தொழிலாளர்களின் ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட காரணங்களால் பேருந்துகளை இயக்குவதற்கான வருவாயைக் கூட ஈட்டமுடியவில்லை. நாள் ஒன்றுக்கு ரூ. 9 கோடி அளவுக்கு போக்குவரத்துக் கழகங்கள் நட்டம் அடைகின்றன. எனவே போக்குவரத்துச் சேவையைத் தொடரவேண்டுமானால் கட்டண உயர்வு என்ற கசப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி மக்களுக்கு ஆலகால விஷத்தை கொடுத்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் நட்டத்திற்கான உண்மையான காரணங்களை மூடிமறைத்து மக்களை வதைக்கிறது.

போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடிக்கும் கட்டண உயர்வுக்கும் உண்மையான காரணங்கள்

போக்குவரத்துக் கழகங்கள் பொதுத்துறையாக இருப்பதுதான் நட்டத்திற்கும், நெருக்கடிக்கும் காரணம் என ஆளும்வர்க்கங்களும், அவர்களின் ஊடகங்களும் நச்சுப் பிரச்சாரத்தை செய்கின்றன. அண்மையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்த வழக்கின்போது, சென்னை உயர்நீதிமன்றம் நிதிநெருக்கடியை தீர்க்க போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கலாம் என்று ஆலோசனை கூறியது. ஆனால் போக்குவரத்துக் கழகங்களின் இன்றைய நெருக்கடிக்கு காரணமே தனியார் மயமாக்கல் கொள்கைகள்தான் என்ற உண்மையை உயர் நீதிமன்றமும் மூடி மறைக்கிறது. போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடிக்கு பின்வரும் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

முதலாவது: மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள். 1991ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், உலகவங்கி, உலக வர்த்தகக் கழகத்தின்  ஆணைகளை ஏற்று கல்வி, மருத்துவம், சுகாதரம், போக்குவரத்து போன்ற அனைத்து சேவைத் துறைகளையும் தனியார்மயம், வணிகமயமாக்கி பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து வருகின்றன. ஜெயலலிதா ஆட்சியோ அதில் முன்னோடும் ஆட்சியாக செயல்பட்டு போக்குவரத்துத் துறையை படிப்படியாகத் தனியாருக்கு ஒப்படைக்கும் பணியைத் தொடங்கி வைத்தது.

பேருந்துகளைப் பராமரிப்பது, பேருந்துகளுக்கு கூண்டு (தீஷீபீஹ்) கட்டுவது, டயர் உற்பத்தி, பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தையும் 90களுக்கு முன்பு போக்குவரத்துக் கழகங்களே மேற்கொண்டன. பின்பு அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன் இலாபகரமாக நடத்தப்படும் ஆயிரக்கணக்கான வழித்தடங்கள் (ரூட்) தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டன. தனியார் பேருந்துகளுக்கு சாதகமாகச் செயல்பட்டு அமைச்சர்களும், அதிகாரிகளும் பெருமளவுக்கு இலஞ்ச ஊழலில் திளைத்தனர். போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தைச் சந்தித்தன.

தற்போது அந்த நட்டத்தையே காரணம் காட்டி தனியாரிடம் முழுமையாக ஒப்படைக்க எடப்பாடி கும்பல் திட்டமிட்டுச் செயல்படுகிறது. அவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டால் இலாபமில்லாத கிராமப்புறப் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும். இலவச பஸ்பாஸ் இன்றி மாணவர்களின் கல்வி சீரழிக்கப்படும். 30 இலட்சம் மாணவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் பலனடைகிறார்கள். இனி அது மறுக்கப்படும். இனி நகர்ப்புறப் போக்குவரத்து “ஊபர், “ஓலா மற்றும் ரிலையன்ஸ், அம்பானிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும். இரண்டு சக்கர ஸ்கூட்டர் மானியத்தைக் காட்டி எடப்பாடியின் ‘அம்மா ஆட்சி பொதுப் போக்குவரத்தை ஒழிக்கும் சதி திட்டத்தால் மக்கள் பெரும் பாதிக்குள்ளாவர்.

இரண்டாவது: மத்திய, மாநில அரசுகளின் புதிய காலனிய வரிவிதிப்புகளால் அரசுப் போக்குவரத்து கழகங்கள் நலிவடைகின்றன. வளர்ச்சி என்ற பேரில் மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் என்றும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க நட்ட ஈடு, ஊக்கத்தொகை என்றும் ஆண்டு தோறும் பல லட்சம் கோடிகளை கொட்டிக் கொடுத்துவிட்டு கஜானாவை காலி செய்கின்றன. மறுபுறம் நிதிப்பற்றாக்குறையைத் தீர்ப்பது என்ற பேரில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து போன்ற சேவைகளை தனியார்மயமாக்கி, வணிகமயமாக்கி மக்களை வதைப்பதுடன், பெருமளவு வரிகளைப் போட்டு மக்களைக் கசக்கி பிழிகின்றன. நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகின்றன.

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டீசல், பெட்ரோல் பொருட்களின் விலைகளை 15க்கும் மேற்பட்ட முறை உயர்த்தியது. அதுவே பொதுப் போக்குவரத்தை முடக்கியது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைந்த போதிலும் மத்திய அரசின் வரிக் கொள்கையால் டீசல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து ஆண்டுக்கு ரூ. 900 ஆயிரம் கோடி கொள்ளையடிப்பது, நட்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழக வருமானத்தின் மீது வருமான வரி விதிப்பது, போக்குவரத்து கழகங்களின் வளர்சிக்கான சலுகைக் கடன் தர மறுப்பது என்ற மத்திய அரசின் கொள்கைகள், மாநில அரசின் வரிவிதிப்புகள், நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பு ஆகியவை போக்குவரத்துக் கழகங்களை முடக்கிப்போட்டுள்ளன.

மூன்றாவது: இலஞ்ச ஊழல்கள் என்ற புதைச் சேற்றில் போக்குவரத்துக் கழகங்கள் மூழ்குகின்றன. டீசல் விலை உயர்ந்தபோதும், தொழிலாளர்களின் கூலி உயர்ந்த போதும் தனியார் பேருந்துகள் இலாபத்திலேயே இயங்குகின்றன. ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மட்டும் நட்டமடைவது ஏன்?

புதிய பேருந்துகள் வாங்குவது, உதிரி பாகங்கள் வாங்குவது, தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பணியிடங்களுக்கு வேலைக்கு அமர்த்த என அமைச்சர்கள், அதிகாரிகளின் வரலாறு காணாத ஊழல்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நலிவுக்கு ஒரு முக்கியக் காரணமாகும். 15 நிர்வாக இயக்குனர்கள், 80 பொது மேலாளர்கள், 120 துணை மேலாளர்கள் என போக்குவரத்துக் கழகங்களின் அதிகரித்துவரும் அதிகாரிகள், இலஞ்ச ஊழல்கள் மூலம் நல்ல வசூல்வேட்டை நாய்களாகச் செயல்பட்டு அதிகார மையமான ‘அம்மா-சின்னம்மாவுக்கு கப்பங்கட்டினர். கொடநாட்டு பங்களாவின் வனப்பும், போக்குவரத்துக் கழகக் கட்டிடங்களின் அவலங்களும் இதற்கு எடுப்பானதொரு சாட்சியாகும்.

எடப்பாடி-பன்னீர் கும்பல் மோடியின் காலடியில் வீழ்ந்து தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் காவுகொடுத்து இலஞ்ச ஊழல்களில் திளைக்கிறது. அரசு நிர்வாகத்தில் ஆளுனர் தலையிடுவதைக் கூட தட்டிக்கேட்கமுடியாத அளவுக்கு ஊழல் போதை தடுத்து நிறுத்துகிறது. தமிழகத்தின் வறட்சி, புயல், வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டதோ ரூ.97,352 கோடி. ஆனால் கிடைத்ததோ வெறும் ரூ.3,884 கோடிதான். எனவே தமிழகத்தின் நிதிநிலை முடங்கி தமிழக அரசு ரூ. 2 இலட்சம் கோடி கடனில் மூழ்கியது. தமிழக அரசு தனது நிதி நெருக்கடி அனைத்தையும் மக்கள் தலையில் சுமத்துவதன் ஒரு வெளிப்பாடுதான் பேருந்துக் கட்டண உயர்வு. எனவே பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்தும் மத்திய, மாநில அரசுகளின் தனியார்மயக் கொள்கைகள், வரிக்கொள்கைகள் மற்றும் ஊழல்களை எதிர்த்துப் போராடுவது உடனடியான கடமையாகும்.

நாடாளுமன்றவாத அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதம்

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்க்கின்றன. ஆனால் எந்த ஒரு கட்சியும் போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடிக்கு காரணமான தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்பதில்லை. ஆதரித்தே வந்துள்ளன. இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் பெருமளவில் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடுகின்றன. காங்கிரசின் தலைவர் திருநாவுக்கரசரோ பேருந்துக் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தியிருக்கலாம் - ஒரேயடியாக உயர்த்தியதுதான் தவறு என்கிறார்.

தி.மு.க. செயல்தலைவர் ஆளும் எடப்பாடி கும்பலுக்கு மக்கள் மீது அக்கறையின்மைதான் கட்டண உயர்வுக்கு காரணம் என்றும், கமிஷன் வாங்கி கொள்ளையடிப்பதிலேயே இந்த ஆட்சி கவனம் செலுத்துகிறது என்றும் குற்றம் சுமத்துகிறார். ஆனால் அமைச்சர் வேலுமணியோ இந்தக் கட்டண உயர்வுக்கு தி.மு.க.தான் காரணம் என்று கூறுகிறார். தி.மு.க. ஆட்சியின்போதுதான் தொழிலாளர்களின் பணத்தை எடுத்து பயன்படுத்த துவக்கியது என்று கூறுகிறார். தி.மு.க.வும் கடந்த காலத்தில் கட்டணத்தை உயர்த்தியதோடு, அதற்கெதிரான போராட்டங்களைக் இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய கட்சிதான். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளில் எந்தவித வேறுபாடும் இல்லை. தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும், மக்கள் மீது நெருக்கடிகளின் சுமைகளைத் திணிப்பதிலும் போட்டி போடும் கட்சிகள்தான். எனவே நாடாளுமன்றவாத அரசியல் கட்சிகளின் சந்தரப்பவாதத்தைப் புறந்தள்ளி பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

பேருந்துக் கட்டண உயர்வை முறியடிப்போம்

பேருந்து, இரயில், டிராம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை இலாமீட்டும் நிறுவனங்களாகக் கருதாமல், சேவையாகக் கருதி அரசே ஏற்று நடத்த வேண்டும். இவற்றை பயன்படுத்துவோரில் பெருபான்மையினர் தம் பணியிடங்களுக்கு சென்று திரும்பவே பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் கல்விக்காக பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன. அதனால் பொதுப் போக்குவரத்து செய்து கொடுப்பதன் மூலம் நாட்டுக்கே நன்மை கிடைக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் அதற்கான நிதிப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும். நட்டத்தை ஈடுகட்டி அரசே நடத்த வேண்டும். இன்றைய தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ இந்திய அரசு இதை செய்யாது. அதனை புரட்சியின் மூலம் அமையும் ஒரு புதிய ஜனநாயக அரசுதான் சாதிக்கும். அத்தகைய அரசமைக்க அணிதிரள வேண்டியது அவசியம். அதற்கு உடனடியாக பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் போராட அறைகூவி அழைக்கிறோம்.

é தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!
é ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!
é போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடிக்கு காரணம் …
·                      -   தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்!
·                      -  மத்திய, மாநில அரசுகளின் வரிக் கொள்கைகள்!
·                     -  அமைச்சர்கள், அதிகாரிகளின் லஞ்ச ஊழல்கள்!
é பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதை எதிர்த்துப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ஜனவரி, 2018

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.