Saturday, February 3, 2018

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!!

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!!

தமிழக அரசே! உயர்சாதி வெறியர்களின் மீது நடவடிக்கை எடு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

தருமபுரியில் பா.ம.க மற்றும் வன்னிய சாதி அமைப்புகள் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தை நடத்தத் திட்டமிட்டு வருகின்றன. நல்லம்பள்ளி வன்னியர் சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியங்கா, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ராஜ்குமாரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். வீட்டில் எதிர்ப்புக் கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாரை சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

சாதிக் கலவரத்தைத் தூண்டும் வன்னிய சாதி அமைப்புகள்

உடனடியாக வன்னிய சாதியைச் சேர்ந்த 300 பேர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நல்லம்பள்ளி சந்தையின்போது சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டினர். பிரியங்காவை ராஜ்குமார் கடத்திவிட்டதாகவும், உடனடியாக பிரியங்காவை ஒப்படைக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் பிரியங்காவை ஒப்படைக்காவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தனர். அன்று இரவே சாதி வெறியர்கள் 6-பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்தனர். அதில் மூன்று பேர் ராஜ்குமார் வீட்டையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியதுடன் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திருப்பித் தாக்கவே ஓடிவிட்டனர்.

வன்னிய சாதியைச் சார்ந்த பெண்கள் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வது என்பது நல்லம்பள்ளிக்கு புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற ஐந்து ஆறு திருமணங்கள் நடந்து எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அதனை பிரியங்காவின் பெரியப்பாவும், 18 கிராமங்களுக்கு நாட்டாமையாகவும், திமுக-வின் ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ள மாணிக்கம் ஆதரித்தே வந்துள்ளார். ஆனால் தற்போது வன்னிய சாதி வெறியர்களின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்துவிட்டார். 18-பட்டி நாட்டாமை வீட்டுப் பெண்ணையே கடத்திவிட்டார்கள் என்றால் பிற பெண்களின் நிலைமை என்னவாகும் என்று சாதிவெறியைத் தூண்டி கலகத்திற்குத் தயாரிக்கின்றனர். சாதி கவுரவம் என்ற பேரில் இளவரசன், கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கரை ஆணவக் கொலை செய்தது போல் தற்போது இவர்களையும் கொலை செய்வதற்கு சாதி வெறியர்கள் துடிக்கின்றனர்.

ஆனால் தான் கடத்தப்படவில்லை; சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டேன், எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று டிசம்பர் 30ஆம் தேதியே அதியமான்கோட்டை காவல்நிலைய ஆய்வாளருக்கு எழுதிய கடிதத்தில் பிரியங்கா கூறுவதை பாருங்கள்: “வன்னியர் (விஙிசி) சமூகத்தை சேர்ந்த ஜெ.பிரியங்கா எழுதுவது. க்ஷி.ஜெகதீசன் -ழி.மாரியம்மாள் அவர்களின் மகளான நான் ஜெ.பிரியங்கா, ஆதி திராவிட (ஷிசி) சமூகத்தைச் சேர்ந்த வி.ராஜ்குமார் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வருகிறேன். எங்கள் வீட்டிற்கு தெரிந்துவிட்டதால் எனது பெற்றோர் வேறொருவருடன் கட்டாயத் திருமணம் செய்ய இருந்ததால் நான் வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டேன். எனவே எங்களுக்கும், ராஜ்குமார் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பாதுகாப்புத் தரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், பா.ம.க தலைவர் ராமதாசோ மேற்கண்ட சாதி மறுப்பு காதல் திருமணத்தை மூடி மறைத்து, பிரியங்காவை கடத்தியதுதான் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் என்று கூறி சாதிக் கலவரத்துக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். நாடகக் காதல் என்று கூறி அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், மனித உரிமைக்கு மாறாகவும், வன்னிய சாதி பெண்களுக்கு எதிராகவும் காட்டு மிராண்டித் தனமான ஆணவக் கொலைகளுக்குத் தூபம் போடுகிறார். ராமதாசு அறிக்கையைத் தொடர்ந்து வன்னிய சாதி வெறியர்கள் வன்னிய இளைஞர், மாணவர் அமைப்பு என்ற பேரில் சாதி வெறியர்களைக் கைது செய்ததைக் கண்டித்தும், தற்காப்புக்காக போராடிய தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கைது செய்யக் கோரியும் கடை அடைப்பு நடத்தி சாதிக் கலவரத்தை தூண்டுகின்றனர். எனவே பிரியங்காவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கூடாது. மாறாக சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கோருகிறோம்.

மேலும் பெரியார் பிறந்த மண் என்று பெருமை பேசும் இவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிக்கு சமூகநீதி பேசி சாதியால் பலனடைந்த இவர்கள், இன்று ஆண்டபரம்பரை என்று கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிவெறித் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். எனவே சாதிவெறித் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீட்டு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம்.

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள்

மத்தியில் இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம் அமைந்ததிலிருந்தே மதவாத, சாதிவாத சக்திகள் பலம்பெற்று தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ‘ஒருநாடு, ஒருமொழி, ஒரு பண்பாடு’ என்ற இந்து ராஜ்ஜியக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காகவும்; மோடி அரசாங்கம் அமல்படுத்தி வரும் புதியகாலனிய புதியதாராளக் கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதை எதிர்த்த மக்களின் போராட்டங்களை திசை திருப்பி மக்களைப் பிளவுபடுத்தவும்; மதவாத சாதிவாத தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துகிறது. தமிழகத்தில் அண்மையில் புத்தாண்டு கொண்டாடியபோது திருகோவிலூரில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவாட்டம் வடகுடிகாடு கிராமத்தில் புத்தாண்டு கொண்டாடிய தலித் இளைஞர்கள் மீது உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். சிவகங்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டுக்குப் பாதை மறுப்பு எனத் தாக்குதல்கள் தொடர்கின்றன.

சாதி வெறிக்கு எதிராக அணிதிரள்வோம்

இத்தகைய சூழலில்தான் தருமபுரி நல்லம்பள்ளி கலவரத்தையும் பார்க்க வேண்டும். சாதி, மதவெறியைக் கிளப்பி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பண்ணையடிமை முறையை திணிப்பதோடு, பெரும்பான்மை மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றும் அரசியல் சந்தர்ப்பவாதமும் இந்த சாதிக் கலவரத்திற்குப் பின்னால் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக, திமுக மீதான நம்பிக்கை தகர்ந்து ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளது. அதனை நிரப்ப ரஜினி, கமல் போன்ற சினிமா நடிகர்கள் அரசியலில் நுழைவது பா.ம.க போன்ற சாதிவாதக் கட்சிகளுக்கு அதிர்ச்சியாக உள்ளது. எனவே சாதிவெறியைத் தூண்டுவதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கின்றன. இத்தகைய சாதிக் கலவரங்களால் வன்னியசாதி மக்களுக்கு எள்முனை அளவுகூட பயனில்லை. எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்னிய மற்றும் உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களை எதிர்த்துக் கீழ்க்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் போராட அறைகூவி அழைக்கிறோம்.

தமிழக அரசே!
 é தருமபுரி-நல்லம்பள்ளி சாதிமறுப்பு காதல் திருமணத் தம்பதிகளுக்குப் பாதுகாப்புக் கொடு!
 é காதல் திருமணத்தை எதிர்த்து சாதிக் கலவரத்தைத் தூண்டும் பா.ம.க. வன்னிய சாதிவெறி அமைப்பினர் மீது நடவடிக்கை எடு!
 é தாழ்த்தப்பட்ட மக்களின் தற்காப்புக்காகப் போராடும் இளைஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடு!
 é சாதிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்த தாழ்த்தப்பட்ட மக்களும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ஜனவரி 2018

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.