Monday, January 26, 2015

இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் இந்தியாவை புதிய காலனியாக்கும் முயற்சியே! (மறு பதிவு)



இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம்
இந்தியாவை புதிய காலனியாக்கும் முயற்சியே!
   ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு, அமெரிக்கா தனது ராணுவக் கொள்கையின் அடிப்படையில் எடுத்துள்ள முதல் நடவடிக்கை இந்திய-அமெரிக்க பாதுகாப்பு வரைவு ஒப்பந்தமாகும்; அதனுடைய இரண்டாவது நடவடிக்கை ஜார்ஜ்புஷ்-மன்மோகன்சிங் கூட்டறிக்கை ஆகும். அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்புக்கு அமெரிக்கா அளிக்க முன்வந்துள்ள விலைதான் இந்தியாவிற்குத் தேவையான அணுசக்தி தொழில்நுட்ப தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிகள். அமெரிக்கா தனது நீண்டகால யுத்ததந்திர நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த ராணுவ ஒப்பந்தத்தை இந்தியா மீது திணித்துள்ளது. இந்திய அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் இரகசியமாக இந்த ஒப்பந்தத்தை செய்துகொண்டதின் மூலம் மானவெட்கமின்றி தேசத்துரோக செயலில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைவு ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவுக்கு அடிபணியச் செய்யும் ஒப்பந்தமாகும். இந்த வரைவு ஒப்பந்தம் செயல் வடிவம் பெற்றால், இந்தியா தனது அரைகுறை இறையாண்மையையும் இழந்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள ஒரு நாடாக மாற்றப்பட்டுவிடும். மேலும் அது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கும் ஆசியாவில் அதன் ராணுவ யுத்ததந்திர நோக்கங்களுக்கும் சேவை செய்யக் கூடிய ஒரு கருவியாக இந்தியாவை மாற்றிவிடும்.
விரிவாகப்படிக்க >>>>>>>

Friday, January 23, 2015

ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்த்த கடலூர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரள்வோம்!


ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!



ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ஜனநாயகவாதிகளே!

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, இந்துத்துவ பாசிச மோடியின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுகிறார். சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திக்கு குறுநில மன்னன் அளிக்கும் விருந்தைப்போல் தலைநகரமே வெள்ளை மாளிகையாக மாற்றப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறது. 2012-ல் இரண்டாம் எலிசபெத் ராணியை வரவேற்க அரசு அலுவலகங்களில் ’சுதந்திர தினக் கொண்டாட்டங்களை கைவிட்டது மன்மோகன் கும்பலின் காங்கிரஸ் ஆட்சி. ‘குடியரசு தினத்தன்று எஜமானன் ஒபாமாவை மலர்ப் பல்லக்கில் சுமந்து வருவதன் மூலம் புதியகாலனிய சேவையில் மன்மோகன் கும்பலையும் விஞ்சிவிட்டது மோடிகும்பல்.

ஒபாமாவின் இந்திய வருகை மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர்த்து இந்தியாவை தனது கூட்டணிக்குள் கொண்டுவருவது; அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது; இந்திய நாட்டின் நிதித்துறை, பாதுகாப்புத் துறை, அணுசக்தித் துறை போன்ற அனைத்துத் துறைகளையும் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திப்பதுடன் இந்துத்துவ மதவெறிப் பாசிச அமைப்புகளுக்கு ஊக்கம் அளித்தல் போன்றவைகளே அவை.

Friday, December 12, 2014

மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!



மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 13 பச்சிளங்குழந்தைகள் மருத்துவ வசதியின்றி மரணமடைந்தன. அதனைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் மரணமடைந்தன. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மரணமடைந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தருமபுரிக்கு இத்தகைய மரணங்கள் புதிதல்ல. இம்மாவட்டத்தில் மாதம் 60 குழந்தைகள் வீதம் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றன.

   பச்சிளங்குழந்தைகள் மட்டுமல்லாது அண்மையில் சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையின்போது, போலி மருந்துகள் பயன்படுத்தபட்டதால் 12 தாய்மார்கள் உயிரிழந்தனர். இதில் மேலும் ஒரு அதிர்ச்சி என்னவெனில், கருத்தடை அறுவை சிகிச்சிசையின் போது தாய்மார்கள் உயிரிழப்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதுதான்.

Thursday, December 4, 2014

மருத்துவ, சுகாதார துறைகளை அரசாங்கம் கைவிட்டு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!


மருத்துவ, சுகாதார துறைகளை அரசாங்கம் கைவிட்டு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!

சிங்கள இனவெறி இராஜபட்சே அரசே! தமிழ் மீனவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!


சிங்கள இனவெறி இராஜபட்சே அரசே!
தமிழ் மீனவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சார்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், புரசாத்ம் ,லாங்லெட் ஆகிய ஐந்து தமிழக மீனவர்களுடன் ஈழத்தமிழ் மீனவர்கள் மூன்று பேரை சேர்த்து ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி பொய்வழக்கு புனைந்து, இலங்கை கடற்படையினர் கைது செய்து, 2011ஆம் ஆண்டு சிறையிலடைத்தனர். மூன்று ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி எட்டு தமிழ் மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிம்னறம் உ த்தரவிட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கின.

ஐந்து தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை முற்றிலும் இரத்துச் செய்து அவர்களை உயிருடன் மீட்டுத்தர வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு இலங்கை அரசு வசமுள்ள 79 விசைப் படகுகள், அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் மீட்டுத்தர வேண்உம் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மீனவர்களின் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. 5 பேர் தூக்கை இரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

Friday, October 24, 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ! ஜனநாயகவாதிகளே !

       வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்குத் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதனால் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்ததுடன் பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறையிலும் அடைக்கப்பட்டார். அத்துடன் அவர் 10 ஆண்டுகள் வரை  தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

ஜெயா கும்பலின் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆனது பற்றி நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா தனது தீர்ப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

“66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.53 கோடி (ரு.53,60,49,954) வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) பொது ஊழியர் பொறுப்பில் இருந்த காலத்தில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13(i)(e)ன் படியும், மற்ற மூன்று குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள தால் இந்தியத் தண்டனைச் சட்டம் 120(B)யின் படியும் குற்றமிழைத்துள்ளார். மற்ற மூவரும் முதல் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 109ன் படி குற்றமாகிறது. எனவே நான்கு பேரும் குற்றவாளிகளே” என்று தீர்ப்பளித்துள்ளார்.

Tuesday, September 30, 2014

சொத்து குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

சொத்து குவிப்பு வழக்கில்
18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை
இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

«  ஜெயா கும்பல் மட்டுமே ஊழல்வாதிகள் அல்ல! அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் ஊழல்வாதிகளே!

« ஊழலின் ஊற்றுக்கண் புதிய காலனிய தாரளமயக் கொள்கைகளே!

«  ஊழலை ஒழிக்க மோடி ஆட்சியின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Tuesday, September 9, 2014

கச்சத் தீவை மீட்போம்! தமிழர் நலனையும், மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

தொடர்புக்கு: செல்: 8098538384


முன்னுரை
கச்சத்தீவில் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையில் கொடூரமாக தாக்கப்படுவது தொடர்கிறது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகும் கூட இத்தகைய தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற 15 நிகழ்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த 319 மீனவர்கள் அவர்களது 62 படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர். மோடி கேட்டுக்கொண்டதன் பேரால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் மீனவர்களின் படகுகள் இன்னமும் விடிவிக்கப்படவில்லை. கடந்த இரு தினங்களில் மீண்டும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கூறிய மோடி கும்பல் இன்று தமிழக மீனவர்களின் முதுகில் குத்துகிறது.

மோடி அரசே! நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!



தொடர்புக்கு: செல்: 8098538384

செப்டம்பர் 12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

மோடி அரசே! நாட்டின் பொருளாதாரத்தை

பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும்

தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!



நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போரட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நரவேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன் கொல்லப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மோடியின் தலைமையிலான இந்துத்துவப் பாசிச பா.ஜ.க.,  தேர்தலில் வென்று   அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன?

செப்டம்பர் 12 தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!


Wednesday, August 20, 2014

புதியகாலனிய தாராளக் கொள்கைகளின் தோல்விகளால் காங்கிரசின் வீழ்ச்சியும் - உலகளாவிய அனுபவங்களும்


நூலினை பெற தொடர்புக்கு
பேசி : 9941611655;
மின் அஞ்சல் :
samaranpublisher@gmail.com;
samaranvelietagam@yahoo.com

உள்ளடக்கம்:

முன்னுரை

இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமடையச் செய்வது எது?

வெளியுறவு நெருக்கடிகள்
(External Crisis)

வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலுக்கு இடையிலான சமநிலை: அரசியல்- பொருளாதாரப் பின்புலம்

புதிய தாராளமயம் புதிய காலனியச் சார்பு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது

பிற்சேர்க்கை
முதலீட்டை விட 10 மடங்கு அதிக சலுகைகள்

முன்னுரை

நான்கு ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கத்துடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனமடையச் செய்வது எதுஎன்ற முதல் கட்டுரையில், நடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு அது கடைப்பிடித்த புதியதாராள பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதற்காலப் பகுதியில் அதாவது 2003--2008 ஆண்டுகளின் காலப்பகுதியில் இந்தியா ஒரு உயர் வளர்ச்சியைச் சந்தித்தது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சராசரியாக 9 சதவீதம் என்ற என்றுமே காணாத வளர்ச்சியை எட்டியது. ஆனால் ஐ.மு.கூட்டணியின் இரண்டாவது காலப்பகுதியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறைந்து வெறும் 4.7 சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது.